ஆவணி முதல் ஞாயிறு: நாகராஜா கோயிலில் அலைமோதிய பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஆக 2022 07:08
நாகர்கோவில், இரண்டு ஆண்டு இடைவெளிக்கு பின்னர் ஆவணி ஞாயிறு நாளில் நாகருக்கு பால் ஊற்றி வழிபட பக்தர்கள் அலைமோதினர். நாகர் பிரதிஷ்டையை மூலவராக கொண்ட நாகர்கோவில் நாகராஜாகோயில் பிரசித்தி பெற்றதாகும். மூலஸ்தானம் இன்னும் ஓலை கூரையின் கீழ் உள்ளது. இங்கு பால் ஊற்றி வழிபாடு நடத்தினால் நோய்கள் தீரும், குழந்தை பாக்கியம் கிடைக்கும், சரும நோய்கள் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஆயில்யம் நாளில் இங்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். அதுபோல ஆவணி ஞாயிறு நாளில் இங்குள்ள நாகர் சிலைகளுக்கு பக்தர்களே பால் ஊற்றி வழிபாடு நடத்துவர். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனாவால் இந்த வழிபாடு தடை செய்யப்பட்டிருந்தது. முதல் ஞாயிறான நேற்று அதிகாலை 4:00 மணிக்கு நடை திறந்தது முதல் பக்தர்கள் நீண்ட கியூ காணப்பட்டது. கோயிலின் வெளிப்புறம் உள்ள நாகர்சிலைகளுக்கு பக்தர்கள் பால் ஊற்றிய பின்னர் கோயிலின் உட்பிரகாரத்தில் நாகர் பிரதிஷ்டையில் அர்ச்சனை நடத்தியும், பால் பாயாசம் வழிபாடு நடத்தியும் வழிபட்டனர். கூட்டம் அதிகமாக இருந்ததால் 12:00 மணிக்கு பதிலாக பகல் 1:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. 26 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.