செஞ்சி: சத்தியமங்கலம் சத்யநாதர் கோவிலில் நடந்த மகா கும்பாபிஷேகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். செஞ்சியை அடுத்த சத்திய மங்கலத்தில் சிதைக்கப்பட்ட மிக பழமையான சத்யாம்பிகை உடனுறை சத்தியநாதர் கோவில் மூலவர் சிலை மட்டும் பல ஆண்டுகளாக பக்தர்கள் வழிபட்டு வந்தனர்.
கடந்த சில ஆண்டாக இக் கோவிலை புதுப்பித்து புதிதாக சன்னதிகள் அமைத்தனர். இதற்கான மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதை முன்னிட்டு கடந்த 17ஆம் தேதி திருவிளக்கு வழிபாட்டுடன் விழா துவங்கியது. தொடர்ந்து வேள்வி பூஜைகளும் சிறப்பு நிகழ்ச்சிகளும் நடந்து வந்தது. நேற்று காலை 9 மணிக்கு நான்காம் கால வேள்வி பூஜை நிறைவும், தொடர்ந்து கடம் புறப்பாடும் 9.25 மணிக்கு விமான கோபுரங்களுக்கு புனித நீரூற்றி மகா கும்பாபிஷேகமும், தொடர்ந்து மூலவர்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகமும் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.