சீர்காழியில் விநாயகர் சதுர்த்தி ஆலோசனை கூட்டம் : புதிய இடத்தில் சிலை வைக்க கூடாது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஆக 2022 05:08
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி காவல் நிலையத்தில் விநாயகர் சதுர்த்தி தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமை தாங்கினார். விநாயகர் சதுர்த்தி விழா குழு ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார், பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் சண்முகம், முருகன், விஸ்வ ஹிந்து பரிஷத் மாவட்ட தலைவர் சதானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சீர்காழி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் அசோக்குமார் வரவேற்பு பேசினார். கூட்டத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கூறுகையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலையை புதிய இடத்தில் வைக்க கூடாது. கடந்த வருடம் சிலை வைத்த இடத்திலேயே இந்த ஆண்டும் வைக்க வேண்டும். விநாயகர் சிலை 10 அடிக்கு குறைவாக இருக்க வேண்டும். விநாயகர் சிலையை பள்ளி மற்றும் மருத்துவமனை அருகில் வைக்க கூடாது. தனி நபர் தங்கள் வீட்டு முன்பு விநாயகர் சிலை வைக்க கூடாது. விநாயகர் சதுர்த்தி முடிந்த மறு தினமே சிலைகளை கரைத்து விட வேண்டும். ஊர்வலத்தின் போது ஜாதி, மதம் சார்ந்த கோஷங்களையும் பாடல்களையோ எழுப்பக்கூடாது. விநாயகர் சிலை வைப்பவர்கள் சார்பில் ஐந்து நபர்கள் 24 மணி நேரமும் சிலைக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும். கீத்து கொட்டகை மற்றும் எளிதில் தீப்பிடிக்க கூடிய வகையில் சிலைகளை வைக்க கூடாது மேற்கண்ட நடைமுறைகளை மீறும் பட்சத்தில் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இந்த கூட்டத்தில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் செந்தில், விநாயகர் சதுர்த்தி விழா குழுவினர்கள் முருகன், பாலகுமாரன், ராஜா, செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் தில்லை நடராஜன் நன்றி கூறினார்.