பதிவு செய்த நாள்
23
ஆக
2022
10:08
ரெட்டியார்சத்திரம்: கோபிநாதசுவாமி கோயில் கிருஷ்ண ஜயந்தி விழாவில், ஏராளமான இளைஞர்கள் வழுக்கு மரம் ஏறினர்.
ரெட்டியார்சத்திரம் அருகே மலைக்குன்றில் பிரசித்தி பெற்ற கோபிநாத சுவாமி கோயில் உள்ளது. ஆண்டுதோறும் கிருஷ்ண ஜெயந்தி விழாவில், வழுக்கு மரம் ஏறுதல், உறியடி திருவிழா நடப்பது வழக்கம். இந்தாண்டிற்கான விழா, ஆக. 20ல் சிறப்பு பூஜைகளுடன் துவங்கியது. மலைக்கோயிலில் இறந்து இறங்கிய உற்சவர், காமாட்சிபுரம், எல்லைப்பட்டி, கொத்தப்புள்ளி உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களில் திருக்கண் எழுந்தருளல் நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான உறியடி திருவிழா, நேற்று நடந்தது. முன்னதாக ரெட்டியார்சத்திரம் கதிர் நரசிங்க பெருமாள் கோயில் முன்பு, 40 அடி உயர வழுக்கு மரம் சிறப்பு அபிஷேக, ஆராதனைகளுடன் ஊன்றுதல் நடந்தது. ரதத்தில் எழுந்தருளிய உற்சவர் கோபிநாதரின் அனுமதி பெறலை தொடர்ந்து, வழுக்கு மரம் ஏறுதல் துவங்கியது. வேலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் ஆர்வத்துடன் ஏறினர். 2 மணிநேர முயற்சிக்குப் பின், சடையாண்டி 25, உச்சியில் இருந்த பரிசு முடிச்சை அவிழ்த்தார். இதனைத் தொடர்ந்து உறியடி திருவிழா நடந்தது. சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.