வடமதுரை: வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா தேவாலய ஆண்டு திருவிழாவிற்காக தேனி, திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் வடமதுரை வழியே பாதயாத்திரை செல்கின்றனர். இத்திருவிழா வரும் ஆக.29ல் கொடியேற்றத்துடன் துவங்கி செப்.8 வரை நடக்க உள்ளது. இதற்காக திண்டுக்கல், தேனி மாவட்ட பக்தர்கள் குழுக்களாக வேளாங்கண்ணி நோக்கி வடமதுரை வழியே நான்கு வழிச்சாலையில் பாதயாத்திரையாக சென்ற வண்ணம் உள்ளனர். இவர்களுள் பலர் கொடி, சிலுவையை ஏந்தியும், சப்பரம், தேர், சைக்கிள் ரிக் ஷா போன்றவற்றில் மாதா சிலையுடன் பக்தி பாடல்களை ஒலிபரப்பியவாறும் செல்கின்றனர். மா.மூ.கோவிலூர் பகுதியை சேர்ந்த பக்தர்கள் கூறுகையில், கடந்த ஆக.22ல் பாதயாத்திரை பயணத்தை துவக்கினோம். மணப்பாறை, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் வழியே ஆக.28 இரவு வேளாங்கண்ணி சென்றடையும் வகையில் திட்டமிட்டு புறப்பட்டுள்ளோம். ஆக.29 காலையில் அங்கு நடக்கும் திருவிழா கொடியேற்று விழாவில் பங்கேற்று வழிபாடு முடித்து ஊர் திரும்புவோம் என்றனர்.