விநாயகர் சதுர்த்தி : விநாயகர் சிலைகள் தயாரிப்பு தீவிரம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஆக 2022 11:08
சாணார்பட்டி, சாணார்பட்டி நொச்சிஓடைப்பட்டி பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழாவினை முன்னிட்டு பல வகையான விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இந்துக்களின் முக்கிய பண்டிகைகளின் ஒன்றாக விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி கோவில்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்து பின் நீர் நிலைகளில் கரைப்பது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் காரணமாக விநாயகர் சதுர்த்தி ஊர்வளத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை. இந்த ஆண்டு வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா வருகிறது. இதனால் இந்த ஆண்டு கொரோனா தொற்று நெறிமுறைகள் தளர்த்தப்பட்டு விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி சாணார்பட்டி அருகே உள்ள நொச்சிஓடைப்பட்டியில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகள் நடந்து வருகிறது. களிமண், காகித கூழ், கிழங்கு மாவு உள்ளிட்டவர்களைக் கொண்டு சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. கருட வாகனம், நந்தி வாகனம், அன்ன வாகனம், மயில்வாகனம், சிம்ம வாகனம் உள்ளிட்ட பல்வேறு வகையான, பல வண்ணங்களில் சிலைகள் உருவாக்கப்படுகிறது. அரை அடி முதல் 15 அடி வரை விநாயகர் சிலை தயார் செய்து வருகின்றனர். இந்த சிலைகளின் விலை ரூ.100 முதல் அதிகபட்சமாக ரூ. 20 ஆயிரம் வரை விற்கப்படுகின்றன. விநாயகர் சிலைகளை வாங்குவதற்கு பொதுமக்கள் இந்த வருடம் அதிக ஆர்வம் காட்டி வருவதாகவும், இந்த ஆண்டு சிலைகளுக்கு அதிக ஆர்டர் கிடைத்துள்ளதாகவும் சிலை தயாரிப்பாளர்கள் கூறுகின்றன. விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில் சிலைகளுக்கு வண்ணம் தீட்டும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.