பிள்ளையார்பட்டி சதுர்த்திப் பெருவிழா : தங்கக் கவச அலங்காரத்தில் விநாயகர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஆக 2022 02:08
திருப்புத்தூர்: பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் சதுர்த்திப் பெருவிழாவை முன்னிட்டு இன்று தங்கக் கவச அலங்காரத்தில் உற்ஸவ விநாயகர் புறப்பாடு நடைபெற்றது.
இக்கோயிலில் சதுர்த்திப் பெருவிழா ஆக.22 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி காலையில் சுவாமி புறப்பாடும், இரவில் திருவீதி உலாவும் நடைபெறுகிறது. இன்று காலை 9:30 மணிக்கு வெள்ளிக் கேடகத்தில் தங்கக் கவச அலங்காரத்தில் உற்ஸவ விநாயகர் புறப்பாடானது. தொடர்ந்து பிரகார வலம் வந்து அலங்கார மண்டபத்தில் எழுந்து மந்திரங்கள் முழங்க, மேள வாத்தியங்கள் ஒலிக்க பத்தி உலாத்துதல் நடந்தது. பின்னர் மூலவருக்கு அபிஷேக, தீபாராதனை நடந்தது. இரவில் கமல வாகனத்தில் விநாயகர் திருவீதி வலம் வந்தார். நாளை இரவு ரிஷப வாகனத்தில் வீதி உலா நடக்கிறது. நாளை மறுநாள் மாலை 4:30 மணிக்கு கஜமுக சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. மக்களுக்கு இன்னல் விளைத்த யானை முகம் கொண்ட சூரனை விநாயகர் வதைக்கும் படலம் கஜமுக சூரசம்ஹாரம் ஆக நிகழ்த்தப்படும். யானை வாகனத்தில் விநாயகர் புறப்பாடாகி கோயில் குளத்தின் வடக்கே சூரனை எதிர் கொள்வார்.