திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித் தேரோட்டம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26ஆக 2022 10:08
திருச்செந்துார்: திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று (26ம் தேதி) ஆவணித் திருவிழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணித் திருவிழா கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. கடந்த 23ம் தேதி சண்முகரின் உருகு சேவையும், சப்பரத்தில் தரிசனமும் நடந்தது. காலை சுவாமி தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தி, சிவன் அம்சத்தில் அருள்பாலித்தார். நேற்று முன்தினம் அதிகாலை சுவாமி சண்முகர் பெரிய வெள்ளி சப்பரத்தில் பிரம்மன் அம்சத்தில் வெள்ளை சாத்தி கோலத்திலும், தொடர்ந்து சதியம் பச்சை சாத்தி விஷ்ணு அம்சத்திலும் எழுந்தருளி அருள்பாலித்தார். 9ம் திருவிழாவை முன்னிட்டு நேற்று கோவிலில் சுவாமி குமரவிடங்க பெருமான், சுவாமி அலைவாயுகந்த பெருமான் தனித்தனி வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருளி பரிவேட்டை செல்லும் நிகழ்ச்சி நடந்தது. இரவில் சுவாமி குமரவிடங்கபெருமான் கயிலாய வாகனத்திலும், வள்ளியம்பாள் வெள்ளி கமல வாகனத்திலும் எழுந்தருளி, தேர் கடாட்சம் அருளி, எட்டு வீதியும் உலா வந்து அருள்பாலித்தனர். திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (26ம்தேதி) காலை 6 மணிக்கு மேல் 6.30 மணிக்குள் சிம்ம லக்னத்தில் துவங்கியது. தேரோட்டத்தின் போது விநாயகர், சுவாமி, வள்ளி அம்பாள் தனித்தனி தேரில் ரதவீதியில் பவனி வந்து அருள்பாலித்தனர். அரோகரா கோஷத்துடன் ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்தனர். ஏற்பாடுகளை கோயில் தக்கார் கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் (பொ) அன்புமணி உள்ளிட்ட கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.