பதிவு செய்த நாள்
26
ஆக
2022
10:08
சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், 30 ஆண்டுகளுக்கு முன் திருடப்பட்ட ஆறு வெண்கல சிலைகள், அமெரிக்காவில் இருப்பது தெரியவந்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், வீரசோழபுரத்தில், திரிபுராந்தகர், திரிபுரசுந்தரி மற்றும் நாரீஸ்வர சிவன் கோவில் உள்ளது.அங்கு, 30 ஆண்டுகளுக்கு முன், நடனமாடும் நடராஜர், வீணாதாரி தட்சிணாமூர்த்தி, துறவி சுந்தரர், பரவை நாச்சியார் என, பஞ்சலோகம் மற்றும் வெண்கலம் என, ஒன்பது சிலைகள் திருடப்பட்டு உள்ளன.
இந்த சிலைகளை மீட்கக் கோரி, வழக்கறிஞர் யானை ராஜேந்திரன், சென்னை உயர் நீதிமன்றத்தில், 2018ல், வழக்கு தொடர்ந்தார். மாநில சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து, சிலைகளை தேடி வந்தனர்.இந்நிலையில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி.ஜி.பி., ஜெயந்த் முரளி மற்றும் ஐ.ஜி., தினகரன் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள், நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து ஆய்வு செய்தனர். மீட்க வேண்டிய சிலைகள் குறித்து, அமெரிக்காவில் உள்ள விஜயகுமார் என்ற சமூக ஆர்வலர் வாயிலாக அடையாளம் காணும் பணியும் நடந்து வந்தது.அப்போது, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருடப்பட்ட, நடனமாடும் நடராஜர், வீணாதாரி தட்சிணாமூர்த்தி, சுந்தரர், பரவை நாச்சியார், திரிபுராந்தகர், திரிபுரசுந்தரி ஆகிய ஆறு வெண்கல சிலைகள், அமெரிக்காவில் அருங்காட்சியகம் மற்றும் ஏலம் விடும் நிறுவனங்களில் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது. இவை சோழர் கால சிலைகள். மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என, போலீசார் தெரிவிக்கின்றனர். சிலைகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.