பதிவு செய்த நாள்
31
ஆக
2022
07:08
* விநாயகரை வழிபட உடனடியாக பலன் கிடைக்கும் என்பதை கணபதி பூஜை கைமேல் பலன் என்பார்கள்.
* மா, பலா, வாழை, கரும்பு ஆகியவற்றை நான்கு கைகளில் ஏந்தியபடி ஐந்தாவது கையான துதிக்கையில் கொழுக்கட்டை வைத்திருப்பவர் பாலகணபதி. சோடச விநாயகர் என்னும் பதினாறு வகை வடிவங்களில் இவரே முதலாமவர்.
* வளர்ந்து முற்றிய வெள்ளெருக்குச் செடியின் வேரில் விநாயகர் உருவம் சுயம்புவாக உருவாகும். இவரை வழிபட்டே சித்தர்கள் அஷ்டமாசித்தி பெற்றனர்.
* திருச்சி லால்குடிக்கு அருகிலுள்ள அன்பில் என்னும் சிவத்தலத்தில் திருஞானசம்பந்தரின் தேவாரத்தை ரசித்துக் கேட்ட செவிசாய்த்த விநாயகர் அருள்பாலிக்கிறார். மதுரை மீனாட்சியம்மன் கோயில், சிதம்பரம் நடராஜர் கோயிலில்
முக்குறுணி விநாயகருக்கு சன்னதி உள்ளது.
* மனித முகத்தோடு இருக்கும் நரமுக கணபதி திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டத்திற்கு அருகிலுள்ள செதிலபதியில் கோயில் கொண்டிருக்கிறார். யானைமுகத்தை ஏற்பதற்கு முன்புள்ள விநாயகர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
* முருகன் வள்ளியை திருமணம் புரிய துணைநின்றவர் விநாயகரே. இதனை அருணகிரிநாதர் திருப்புகழில் அக்குறமகளுடன் அச்சிறுமுருகனை அக்கண மணமருள் பெருமாளே எனப் போற்றுகிறார்.
* விநாயகரை முழுமுதல் கடவுளாக வழிபடுவதற்கு காணாபத்யம் என்று பெயர். இதன்படி படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்தொழில்களை நடத்தி பிரபஞ்சத்தை விநாயகரே இயக்குகிறார்.
* கடவுள் உயர்ந்தவராக இருந்தாலும் அவரைத் தாங்கும் சக்தி நம் மனதிற்கு உண்டு என்பதை உணர்த்தவே, பெரிய உருவம் கொண்ட விநாயகருக்கு சிறிய மூஞ்சூறுவை வாகனமாக அமைத்தனர்.
* விநாயகர் சதுர்த்தி விரதத்தை ஆவணி வளர்பிறை சதுர்த்தி முதல் புரட்டாசி வளர்பிறை சதுர்த்தி வரை மேற்கொள்ள வேண்டும் என்கிறது விநாயகர் புராணம்.
* திருச்சி திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி உக்கிர தெய்வமாக இருந்த போது, ஆதிசங்கரர் அம்மனுக்கு எதிரில் விநாயகரைப் பிரதிஷ்டை செய்தார். உக்கிரம் தணித்த விநாயகர் என்னும் இவரை வழிபட்டால் மனம் அமைதி பெறும்.
* நடனக்கலையில் வல்லவரான சிவனைப் போல விநாயகரும் நாட்டியம் ஆடுவதில் வல்லவர். இந்த நர்த்தன விநாயகரை வழிபட்டால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
* காங்கி டெக் என்னும் புத்தமதக் கடவுளுடன் இணைந்து அருள்புரியும் விநாயகர் கவான்வின் ஷேர் விநாயக் ஷா எனப்படுகிறார். ஜப்பானில் உள்ள யோகப் பயிற்சியாளர்கள் இவரை விரும்பி வழிபடுகின்றனர்.
* வக்ர துண்டர், மகோத்ரதர், கஜானனர், லம்போதரர், விகடர், விக்னராஜர், துாம்ரவர்ணர், சூர்ப்பகர்ணர் என்னும் எட்டு அவதாரங்களை விநாயகர் எடுத்துள்ளார்.
* முதற்கடவுளான விநாயகரும், மங்கள மூர்த்தியான ஆஞ்சநேயரும் இணைந்த திருக்கோலம் ஆதியந்தப்பிரபு. இவரை வழிபட்டால் சுபவிஷயங்கள் இனிதே நிறைவேறும்.
* இலங்கையிலுள்ள கதிர்காமத்தில் முறிவண்டி விநாயகர் கோயில் உள்ளது. வாகனத்தில் செல்வோர் இவரை வழிபட்டு நிம்மதியான வாகனப்பயணம் அமைய வேண்டுகின்றனர்.
கன்னி ராசி என் ராசி: பிறந்த நேரத்தை வைத்து நாம் ஜாதகம் கணிப்பது போல கடவுளுக்கும் ஜாதகம் உண்டு. விநாயகரின் நட்சத்திரம் அஸ்தம் என்பதால் கன்னி ராசிக்கு உரியவராகிறார். இவருடைய ஜாதகத்தில் கடகத்தில் குருவும், மகரத்தில் செவ்வாயும், கன்னியில் புதனும் உச்ச பலத்துடன் உள்ளனர். சூரியன் தன் சொந்த வீடான சிம்மத்தில் ஆட்சி பலத்துடன் இருக்கிறார். செவ்வாய்க்குரிய விருச்சிகமே இவரது லக்னம். விநாயகரின் ஜாதகத்தை பூஜித்தால் நல்ல புத்தி உண்டாகும். முயற்சியில் குறுக்கிடும் தடை நீங்கும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெறும்.
பெரிய இடத்துப் பிள்ளை: பார்வதி, சிவன் தம்பதிக்கு விநாயகரும், முருகனும் பிள்ளைகள் என்பது தெரியும். ஆனால் மூத்தபிள்ளை விநாயகரை மட்டும் பிள்ளையார் என மதிப்புடன் அழைக்கிறோம். குடும்பத்தில் தந்தையை தந்தையார் என்றும், தாயை தாயார் என்றும், தமையனை தமையனார் என்றும், அண்ணியை அண்ணியார் என்றெல்லாம் மரியாதையுடன் அழைக்கலாம். ஆனால் குழந்தைகளை பிள்ளையார் என யாரும் அழைப்பதில்லை. அந்த மரியாதை விநாயகருக்கு மட்டுமே தரப்படுகிறது. இதற்கு காரணம் உலகிற்கே பெரியவர்களான பார்வதி, சிவபெருமானின் பிள்ளை விநாயகர் என்பதோடு, கருணை, பலம், புத்திக்கூர்மை, அன்புமனம் கொண்டவர் என்பதால் இவரை பிள்ளையார் என போற்றுகிறோம்.
கிரக தோஷம் போக்குபவர்: குரு, சனி போன்ற கிரகங்களின் பெயர்ச்சி சாதகமாக இல்லாவிட்டால் அதிலிருந்து நம்மை விடுவித்து காப்பவர் நவக்கிரக விநாயகர். இவரது உடம்பில் நவக்கிரக நாயகர்கள் அடங்கியுள்ளனர். கிரக தோஷம் அகல விநாயகர் சதுர்த்தியன்று இவரை வழிபடுவது சிறப்பு. இவரது நெற்றியில் சூரியன், நாபிக்கமலத்தில் சந்திரன், வலது தொடையில் செவ்வாய், வலது கீழ்க்கையில் புதன், தலையில் குரு, இடது கீழ்க்கையில் சுக்கிரன், வலது மேல்கையில் சனி, இடது மேல்கையில் ராகு, இடது தொடையில் கேது உள்ளனர்.
எந்த ராசிக்கு என்ன விநாயகர்:
மேஷம் - வீரகணபதி
ரிஷபம் - வித்யா கணபதி
மிதுனம் - கண்திருஷ்டி கணபதி
கடகம் - ஹேரம்ப கணபதி
சிம்மம் - விஜய கணபதி
கன்னி - உச்சிஷ்ட கணபதி
துலாம் - ஷிப்ர ப்ரஸாத கணபதி
விருச்சிகம் - நர்த்தன கணபதி
தனுசு - சங்கடஹர கணபதி
மகரம் - யோக கணபதி
கும்பம் - சித்தி கணபதி
மீனம் - பால கணபதி உங்கள் ராசிக்குரிய விநாயகர் படத்தை வாங்கி வீட்டில் வழிபட நன்மை பெருகும்.
வெற்றி கிடைக்க...: காசியில் டுண்டி ராஜகணபதி கோயில் கொண்டிருக்கிறார். டுண்டி என்ற சொல்லுக்கு தொந்தி எனப் பொருள். பெருவயிறு கொண்டவர் என்பதால் இவர் தொந்தி கணபதி ஆகிறார். அந்த டுண்டியே தமிழில் தொண்டி என திரிந்திருக்க வேண்டும் என்பர். தொண்டி கடலில் இருந்து இலங்கைக்கு பாலம் கட்ட ராமபிரான் வந்த போது, இங்கு கட்டுவதை விட ராமேஸ்வரத்தில் இருந்து பாலம் கட்டினால் இலங்கை செல்வது எளிது என வழிகாட்டியவர் விநாயகரே. ராமபிரானுக்கு துணை நின்ற இவரை வழிபட்டால் வாழ்வில் வெற்றி கிடைக்கும்.
ஓராண்டு விரதமிருங்க!: சங்கடம் என்றால் கஷ்டம். ஹர என்றால் கரிந்து (எரிந்து) போதல். சதுர் என்றால் நான்கு. அதாவது சங்கடத்தை போக்கும் நான்காம் நாள் என்பதால் சங்கடஹர சதுர்த்தி எனப் பெயர் வந்தது. தேய்பிறையில் வரும் இந்த நாளில் விரதமிருந்து இரவில் கோயிலில் நடக்கும் பூஜையில் பங்கேற்பது நல்லது. இந்த விரதத்தை எந்த தமிழ் மாதத்தில் துவங்குகிறோமோ, அதே மாதம் வரை ஓராண்டுக்கு கடைபிடிக்க வேண்டும். மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தி செவ்வாயன்று வருமானால் அதை விட சங்கடஹர சதுர்த்தி விரதத்தை தொடங்க சிறந்த நாள் வேறில்லை.
சதுர்த்தியும் கிழமையும்: விநாயகர் வழிபாட்டில் கிழமைக்கு ஏற்ப பலன். ஞாயிறு - உடல் நலம் பெருக திங்கள் - மன நலம் சிறக்க செவ்வாய் - செவ்வாய் தோஷம் தீர புதன் - கல்வி, நல்ல பண்பு வளர வியாழன் - நல்ல மணவாழ்வு அமைய வெள்ளி - செல்வம் சேர சனி - நீண்ட ஆயுளுக்கு