பதிவு செய்த நாள்
06
செப்
2022
06:09
பல்லடம்: பல்லடம் அருகே, அல்லாளபுரம் உலகேஸ்வர சுவாமி, மற்றும் கரிய காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, 800 பேருடன் முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.
பல்லடம் அடுத்த, அல்லாளபுரம் உண்ணாமலை அம்மன் உடனமர் உலகேஸ்வர சுவாமி, மற்றும் கரிய காளியம்மன் கோவில்கள், 27 ஆண்டுக்கு பின் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்காக, 48 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு, யாக சாலை பூஜைகள் துவங்கி நடந்து வருகின்றன. செப்., 4ம் தேதி முதல், விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி பூஜையுடன் விழா துவங்கியது. தொடர்ந்து, நேற்று, கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், மகா கணபதி ஹோமம், முதலா கால யாக பூஜை உள்ளிட்டவை நடந்தன. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, தினசரி இரவு கும்மியாட்ட கலை நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. நேற்று, பெருமாள் கோவிலில் இருந்து முளைப்பாரி ஊர்வலம் எடுத்துவரப்பட்டு யாகசாலையை அடைந்தது. கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில் யானை முன்னிலை வகிக்க, உண்ணாமலை அம்மன் உடனமர் உலகேஸ்வர சுவாமி உற்சவ மூர்த்தி கோவிலை வலம் வந்தனர். தொடர்ந்து, கோ பூஜையும், இரவு பவளக்கொடி கும்மியாட்ட நிகழ்ச்சியும் நடந்தது.