2 ஆண்டுகளுக்கு பிறகு பிரம்மாண்டமாக நடைபெற உள்ள திருப்பதி பிரம்மோற்சவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06செப் 2022 08:09
திருப்பதி : திருமலை திருப்பதியில் ஆண்டு முழுவதுமே விழாக்கள்தான் என்றாலும் ஆண்டிற்கு ஒரு முறை நடைபெறும் பிரம்மோற்சவ விழா வெகு விமரிசையானது. தமிழகத்தில் நவராத்திரி என்ற பெயரில் நடைபெறும் விழாதான் திருமலையில் பிரம்மோற்சவ விழா என்ற பெயரில் நடைபெறுகிறது. மொத்தம் ஒன்பது நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் உற்சவமூர்த்தியான மலையப்பசுவாமி காலையிலும் இரவிலும் விதவிதமான வாகனங்களில் வலம்வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். சுவாமி மாடவீதிகளில் வலம்வரும் போது அவருக்கு முன்பாக பல்வேறு மாநில கலைஞர்களின் கவின்மிகு நடனங்கள் இடம்பெறும் சுவாமியை தரிசிக்கவும், பக்தர்களின் நடனங்களை ரசிக்கவும் என வெளியூர் மட்டுமின்றி வெளிநாடுகளில் வசிக்கும் பக்தர்கள் என பல லட்சக்கணக்கானவர்கள் திருமலையில் கூடுவர். இதன் காரணமாக இந்த வருட பிரம்மோற்சவத்தின் போது அரசு முறையிலான விருந்தினர்கள் தவிர மற்ற அனைத்து பிரமுகர்கள் 300 ரூபாய் டிக்கெட் எடுத்துவரும் பக்தர்கள் தரிசனம் என அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது,யாராக இருந்தாலும் இலவச தரிசனத்திற்கான வரிசையில் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.ஆகவே நிச்சயம் தரிசனத்திற்கு நீண்ட நேரமாகும். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மக்கள் மத்தியில் பிரம்மாண்டமாக திருமலை திருப்பதி பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது.
பிரம்மோற்சவ நிகழ்ச்சிகள்:
27- 09 2022 கொடியேற்றம் இரவில் பெரிய சேஷ வாகனம் 28 09 2022 காலையில் சின்ன சேஷ வாகனம் இரவில் அன்னவாகனம் 29 09 2022 காலையில் சிம்ம வாகனம் இரவில் முத்துப்பந்தல் வாகனம் 30 09 2022 கற்பகவிருட்ச வாகனம் இரவில் சர்வபூபாள வாகனம் 01 10 2022 காலையில் மோகினி அவதாரம் இரவில் கருட வாகனம் 02 10 2022 காலையில் அனுமன் வாகனம் மாலையில் தங்கரதம் இரவில் யானை வாகனம் 03 10 2022 காலையில் சூரியபிரபை வாகனம் இரவில் சந்திரபிரபை வாகனம் 04 10 2022 காலையில் தேரோட்டம் இரவில் குதிரை வாகனம் 05 10 2022 காலையில் சக்ரஸ்நானம் இரவில் கொடியிறக்கம் -எல்.முருகராஜ்