பதிவு செய்த நாள்
07
செப்
2022
07:09
பல்லடம்: உலகேஸ்வர சுவாமி, மற்றும் கரியகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் விழா, யாகசாலை பூஜையுடன் கோலாகலமாக துவங்கி நடந்து வருகிறது.
பல்லடம் அருகே அல்லாளபுரத்தில், வரலாற்று புகழ் பெற்ற பழம்பெருமை வாய்ந்த உண்ணாமுலை அம்மன் உடனமர் உலகேஸ்வர சுவாமி, மற்றும் கரிய காளியம்மன் கோவில்கள் கும்பாபிஷேக விழா, நாளை காலை, 5 மணிக்கு மேல் நடைபெற உள்ளது. செப்., 4ம் தேதி முதல் கும்பாபிஷேக விழா துவங்கி நடந்து வருகிறது. நேற்று காலை, 8.30 மணிக்கு விக்னேஸ்வர பூஜையுடன் விழா துவங்கியது. தொடர்ந்து, இரண்டாம், மற்றும் மூன்றாம் கால யாக பூஜைகளுடன் , பூர்ணாஹூதி, தீபாராதனை உள்ளிட்டவையும் நடந்தன. சுற்றுவட்டார கிராம மக்கள் ஏராளமானோர் யாகசாலை பூஜையில் பங்கேற்று, அம்மையப்பரின் அருள் பெற்றனர். தொடர்ந்து, இரவு 8 மணிக்கு இசை நிகழ்ச்சி, மற்றும் கொங்கு பெருஞ்சலங்கை ஆட்டம் ஆகிவை நடந்தன. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, விழா குழுவின் சார்பில், பொதுமக்களுக்கு தினசரி அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. நாளை காலை, 5 முதல் 6 மணிக்குள், வேத மந்திரங்கள் முழங்க உலகேஸ்வரர் மற்றும் கரிய காளியம்மன் கோவில் கும்பாபிஷேகங்கள், ஆயிரக்கணக்கான பக்தர்களின் பங்கேற்புடன் கோலாகலமாக நடைபெற உள்ளது.