பதிவு செய்த நாள்
20
ஆக
2012
10:08
நாகர்கோவில்:ஆவணி முதல் ஞாயிற்றுகிழமையை யொட்டி, நேற்று நாகர்கோவில் நாகராஜா கோயிலில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தமிழகத்தில் நாகதோஷத்தை தீர்க்கும் முக்கிய தலங்களில் ஒன்று நாகர்கோவில் நாகராஜ கோயில். ஜாதக அடிப்படையில் ராகு, கேது தோஷம், திருமண தடை, குழந்தை பேறு இன்மை ஆகியன காரணமாக பாதிக்கபடுவோருக்கு நாகர்கோவில் நாகராஜா கோயிலில் தரிசனம் செய்தால் கஷ்டங்கள் தீரும் என்பது நம்பிக்கை. இக்கோயிலில் ஞாயிறு தோறும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகிறது. ஞாயிற்றுகிழமைகளில் நாகராஜாவிற்கு பால் வார்ப்பது புனிதமாக கருதபடுகிறது. அதிலும் ஆவணி ஞாயிற்றுகிழமை கோயிலில் வழிபாடு நடத்தினால் மிகவும் சிறப்பானதாக கருதபடுகிறது.
ஒவ்வொரு ஆண்டும், ஆவணி மாதம் ஞாயிற்றுகிழமைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்வர். இந்த நிலையில் நேற்று முதல் ஆவணி ஞாயிற்றுகிழமை ஆகும். நாகராஜா கோயிலில் காலை 4 மணிக்கு நடை திறக்க பட்டு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் தீபாராதனை நடந்தது. மேலும் கோயில் சுற்று பிரகாரம் பகுதியில் உள்ள சிவன், பாலமுருகன், சாஸ்தா, உள்ளிட்ட தெய்வங்களுக்கு அபிஷேகமும் தீபாராதனையும் நடந்தது. இந்த நிகழ்ச்சிகளில், பக்தர்கள் அதிக அளவில் கோயிலுக்கு வருகை புரிந்தனர். கன்னியாகுமரி மாவட்டம் மட்டுமின்றி, கேரளா பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். திருமணம் கைகூடவும், குடும்ப கஷ்டங்கள் தீரவும் காணிக்கை செலுத்தி நாகராஜாவை வணங்கி சென்றனர். மேலும் பக்தர்கள் நாகர் சிலைகளுக்கு பால் வார்த்தும், மஞ்சள், உப்பு போன்றவை வாங்கி தங்கள் நேர்ச்சை கடன் செய்தனர். நேற்று முதல் ஆவணி ஞாயிற்றுகிழமை ஆதலால் ஏராளமான பக்தர்கள் காலை முதலே கோயிலுக்கு வந்த வண்ணம் இருந்தனர். கோயிலின் அருகே மஞ்சள், உப்பு, பால் வியாபாரம் அதிக அளவில் நடந்தது. கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யபட்டு பக்தர்கள் சிரமமின்றி இறைவனை தரிசித்தனர். மதியம் தீபாராதனை நடந்தது. பின்னர் மாலை 6.30 மணியளவில் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து அத்தாளபூஜையும், ஆதிசேஷன் வாகனத்தில் அனந்தகிருஷ்ணன் எழுந்தருளி, கோயிலை வலம் வரும் நிகழ்ச்சியும் நடந்தது. நேற்று கோயிலில் குமரி மாவட்ட நீதித்துறை சார்பில் பூஜைகள் நடத்தப்பட்டது. மாவட்ட நீதிபதி குமரகுரு, தலைமை குற்றவியல் நீதிபதி பால்துரை, உரிமையியல் நீதிபதி செல்வம், மாஜிஸ்டிரேட் சுந்தரையா, வக்கீல்கள் சங்க தலைவர் செல்வராஜ், முன்னாள் தலைவர் வெற்றிவேல், வக்கீல்கள் பாலகணேசன், ஆறுமுகம், சிவகுமார் மற்றும் கோர்ட் ஊழியர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.ஏற்பாடுகளை அறநிலையத்துறை இணை ஆணையர் ஞானசேகர் தலைமையில் செய்து இருந்தனர். மேலும் ஆண், மற்றும் பெண் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். மாற்று உடையிலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.ஐய்யப்பா சேவா சங்கம் சார்பில் பக்தர்களுக்கு மோர் வழங்கப்பட்டது.