திருவள்ளூர்:அங்காளம்மன் கோவிலில், 32ம் ஆண்டு ஆடித் திருவிழா கோலாகலமாக நடந்தது.திருவள்ளூர் அடுத்த, மணவாளநகர் கணேசபுரம் பகுதியில் உள்ளது அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில். இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம், ஐந்தாவது ஞாயிற்றுக்கிழமை ஆடித் திருவிழா நடைபெறுவது வழக்கம். நேற்று, 32ம் ஆண்டு ஆடித் திருவிழா நடந்தது.விழாவையொட்டி 17ம் தேதி மாலை, கிராம பெண்கள் ஒன்று கூடி, கோவில் வளா கத்தில் பொங்கலிட்டு, அம்மனுக்கு படையலிட்டு வழிபட்டனர். நேற்று காலை 10 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மகா தீபாராதனையும், கூழ்வார்த்தல் நிகழ்ச்சியும் நடந்தது. மாலையில், அம்மன் கரகம், ஆற்றங்கரை ஆதிசோமேஸ்வரர் ஆலயம் சென்றடைந்தது. மாலை 6 மணிக்கு அங்கிருந்து திரளான பக்தர்கள் தீச்சட்டி ஏந்தி, அம்மன் கரகத்துடன் அங்காளம்மன் கோவில் வந்தடைந்தனர். அங்கு அம்மனுக்கு படையலிட்டு தீபாராதனை நடத்தினர். இரவு 9 மணிக்கு உற்சவர் அம்மன் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.