நாகப்பட்டினம்: நாகை அடுத்த நாகூர் தர்காவில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நடந்த சிறப்பு தொழுகையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். சகோதரத்துவத்தையும், ஏழைகளுக்கு உதவி செய்வதையும் வலியுறுத்தும் விதமாக முஸ்லிம்களால் கொண்டாடப்படும் ரம்ஜான் பண்டிகை, நாகை மாவட்டம் முழுவதும் நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. நாகூர், ஷாஹூல் ஹமீத் பாதுஷா நாயகம் தர்காவில் ,மேனஜிங் டிரஸ்டி ஷேக் ஹசன் சாகிப் "துவா ஓதியபின் நடந்த சிறப்பு தொழுகையில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். சுனாமியால் பாதிக்கப்பட்ட நாகூர் சில்லடி தர்கா பகுதியில், சில்லடி சாகிப் தலைமையில் சிறப்பு தொழுகை நடந்தது. நாகை, யாகூசைன் பள்ளி,மோர்ஷா பள்ளி, சாகுல் ஹமீது பள்ளி உட்பட மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளி வாசல்களில் நேற்று சிறப்பு தொழுகை நடைபெற்றது. அனைத்து இடங்களிலும் தொழுகை நடத்திய பின், முஸ்லிம்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.