பதிவு செய்த நாள்
20
செப்
2022
05:09
திருப்பூர்: ஸ்ரீதுர்கா பூஜை மகா உற்சவத்தை முன்னிட்டு, கொல்கத்தா கைவினை கலைஞர்கள், கங்கை மண் எடுத்து வந்து திருப்பூரில் சிலைகள் வடிவமைப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.திருப்பூரில் வசிக்கும் மேற்கு வங்க மக்கள் சார்பில், திருப்பூர் பெங்காலி கல்ச்சுரல் அசோசியேஷன் இயங்கி வருகிறது. நவராத்திரி விழாவில், துர்கா சிலைகளை செய்து, திருப்பூரில் பிரமாண்டவிழா எடுத்து கொண்டாடி வருகின்றனர். கொரோனா ஊரடங்கால், இரண்டு ஆண்டுகள் விழா நடைபெறாத நிலையில், 14வது ஸ்ரீதுர்கா பூஜை மகா உற்சவ விழா, அக்., 1 முதல் 5ம் தேதி வரை , சவுடாம்பிகா கல்யாண மண்டபத்தில் நடக்க உள்ளது. அதற்காக, ஒவ்வொரு ஆண்டும் கொல்கத்தா பாணியில் சிலை டிவமைக்கப்படுகிறது. கொல்கத்தாவில் இருந்து வந்துள்ள, 15க்கும் அதிகமான கைவினை கலைஞர்கள், துர்கா, மகா லட்சுமி, சரஸ்வதி, விநாயகர் சிலைகள் வடிவமைப்பு பணியில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
சிலைகள் வடிவமைக்கும் கலைஞர்கள் கூறியதாவது: கொல்கத்தாவில் இருந்து, களி மண், கங்கை ஆற்று மண், வைக்கோல், கயிறுகள் மற்றும் அலங்கார பொருட்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. சிலைகளை அங்கிருந்து கொண்டுவர இயலாது என்பதால் , திருப்பூர் வந்து சிலை வடிவமைக்கிறோம். இயற்கை வண்ணத்தால் , கலர் கொடுத்து அலங்கரிக்கப்படும். மேலும், கொல்கத்தாவை போலவே , ஜரிகை , ஜடாமுடி, அலங்கார பொருட்களை கொண்டு தத்ரூபமாக அலங்காரத்துடன் சிலைகள் வடிவமைக்கப்படும். சிலை வடிமைப்பு பணி, 25ம் தேதிக்குள் நிறைவு செய்யப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.