பதிவு செய்த நாள்
21
செப்
2022
06:09
மேட்டுப்பாளையம்: குறிஞ்சி நகரில் புதிதாக கட்டிய குறிஞ்சிநாயகி அம்மன் உடனமர் குறிஞ்சீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் இன்று நடைபெறுகிறது.
மேட்டுப்பாளையம் அடுத்த ஜடையம்பாளையம் புதூரில் குறிஞ்சி நகர் உள்ளது. இங்கு புதிதாக குறிஞ்சிநாயகி அம்மன் உடனமர், குறிஞ்சீஸ்வரர் (சிவன்) கோவில் கட்டப்பட்டது. இக்கோவிலின் கும்பாபிஷேக விழா நேற்று, புனித தீர்த்து குடங்கள் மற்றும் முளைப்பாரி எடுத்து வரும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. இதை அடுத்து இரவு, 7:30 மணிக்கு முந்து தமிழால் முதற்கால வேள்வி பூஜை செய்யப்பட்டது. பேரொளி வழிபாடு முடிந்த பின், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இன்று காலை, 5:00 மணிக்கு திருப்பள்ளி எழுச்சியும், மூல மூர்த்திகளுக்கு காப்பணிவித்தல் நடைபெற உள்ளது. 7:30 மணிக்கு இரண்டாம் கால வேள்வியும், 9:00 மணிக்கு வேள்வி சாலையில் இருந்து திருக்குடங்கள் புறப்பட்டு கோவிலை வலம் வருகிறது. பின்பு, 9:45 மணிக்கு மூலமூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அதை தொடர்ந்து அருளாளர்கள் ஆசிரியரையும், பதின்மங்கலக் காட்சியும், பெருந்திருமஞ்சனம், பேரொளி வழிபாடு திருமுறை விண்ணப்பம் ஆகிய வழிபாட்டிற்கு பின், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட உள்ளது. வேள்வி பணிகளை பவானியை சேர்ந்த சிவனடியார் திருக்கூட்டம் அறக்கட்டளையினர் செய்கின்றனர். சின்னதொட்டிபாளையம் திருவருணை மடத்தின் அருணை அருள்முருக அடிகளார், தெய்வீக சித்தாந்த இலக்கிய மன்ற தலைவர் ஒளியரசு, சிவனடியார் திருக்கூட்டம் அறக்கட்டளை தலைவர் தியாகராசன் ஆகியோர் முன்னிலையில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர், குறிஞ்சி நகர் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.