திட்டக்குடி அருகே கோவில் கலசங்கள், உண்டியல் திருட்டு; போலீசார் விசாரணை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22செப் 2022 02:09
திட்டக்குடி: திட்டக்குடி அருகே எழுத்தூர் செல்லியம்மன் கோவில் கலசங்கள், அய்யனார் கோவில் உண்டியலை உடைத்து திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
கடலூர் மாவட்டம், திட்டக்குடி அடுத்த எழுத்தூர் கிராமத்தில் ஏரிக்கரை அருகே செல்லியம்மன் கோவில் உள்ளது. நேற்று காலை கோவிலின் கோபுரத்தில் இருந்த கலசம் காணாமல் போனது கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள், கோவிலுக்கு சென்று பார்த்தபோது கோபுரத்தில் பொருத்தப்பட்டிருந்த மூன்று கலசங்கள், கோவிலில் இருந்த ஒரு செம்பு குடம், பித்தளை தட்டு ஆகியவை நேற்று திருடுபோயிருந்தது தெரிந்தது. இதேபோல் ஏரியின் தெற்குபக்கம் உள்ள அய்யனார் கோவில் முன்பிருந்த திரிசூலத்தைப் பிடுங்கி, அதன் மூலம் கோவில் உண்டியலை உடைத்து அதிலிருந்த பணத்தை மர்மநபர்கள் திருடிச்சென்றனர். காலையில் அவ்வழியே சென்றவர்கள் அளித்த தகவலின் பேரில் ராமநத்தம் போலீசார் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். அய்யனார் கோவில் சிசிடிவி கேமரா ஒயரையும், திருடர்கள் அறுத்துவிட்டுச்சென்றிருந்தனர். திட்டக்குடி, வேப்பூர் பகுதியில் அடுத்தடுத்து கோவில் கலசங்கள், உண்டியல் திருட்டு நடப்பது அதிகரிப்பதால் திருடர்களைக்கண்டறிய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.