பதிவு செய்த நாள்
23
செப்
2022
07:09
அன்னூர்: அன்னூர் வட்டாரத்தில், பெருமாள் கோவில்களில், நாளை புரட்டாசி திருவிழா நடக்கிறது. அன்னூர் அருகே உள்ள மொண்டிபாளையம், வெங்கடேச பெருமாள் கோவில் பிரசித்தி பெற்றது. மேலத் திருப்பதி என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலத்திலிருந்து பல ஆயிரம் பக்தர்கள் பெருமாளை தரிசிப்பர்.
இக்கோவிலில் கடந்த 17ம் தேதி முதல் சனிக்கிழமை உற்சவம் நடந்தது. நாளை அதிகாலை 4:00 மணிக்கு பெருமாளுக்கு திருமஞ்சனம் நடக்கிறது. இதையடுத்து அபிஷேக பூஜை, அலங்கார பூஜை நடக்கிறது. இரவு 7:00 மணிக்கு கர்நாடக இசை நிகழ்ச்சியும், 8:00 மணிக்கு கருட வாகனத்தில் ஸ்ரீ தேவி, பூதேவி சமேதரராக வெங்கடேச பெருமாள் உலா வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது. புரட்டாசி திருவிழாவை முன்னிட்டு, அன்னூர், மேட்டுப்பாளையம், புளியம்பட்டி மற்றும் அவிநாசியில் இருந்து சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் நாளை அதிகாலை 4:00 மணிக்கு, திருமஞ்சனமும், இதையடுத்து 5:30 மணிக்கு அபிஷேக பூஜை, அலங்கார பூஜை நடக்கிறது. குன்னத்தூர் புத்தூர் பெருமாள் கோவிலில், ஸ்ரீ தேவி பூதேவி உடனமர் நாராயணமூர்த்திக்கும் ஆஞ்சநேயருக்கும் காலை 8:30 மணிக்கு சிறப்பு வழிபாடு நடக்கிறது. காட்டம்பட்டி ஊராட்சி, வரதையம்பாளையத்தில் பெருமாள் கோவிலில் அதிகாலையில் கரி வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. அன்னூர் வட்டாரத்தில் கஞ்சப்பள்ளி, பொகலூர், கோவில்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பெருமாள் கோயிலில் நாளை காலை சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.