அய்யாவாடி மகா பிரத்தியங்கரா தேவி கோவிலில் நிகும்பலா யாகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26செப் 2022 08:09
கும்பகோணம்: அய்யாவாடி ஸ்ரீ மகா பிரத்தியங்கரா தேவி கோவிலில் நடைபெற்ற மகாளய அமாவாசை நிகும்பலா யாகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அடுத்த அய்யாவாடி கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மகா பிரத்தியங்கிரா தேவி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் பஞ்சபாண்டவர்களும், இராவணன் மகன் மேகநாதனும் அம்பாளை பூஜித்து வேண்டிய வரங்களை பெற்றுள்ளனர். எட்டுத்திக்கும் மயானத்தால் சூழப்பட்ட இக்கோவிலில் அம்மாவாசை தோறும் மிளகாய் வற்றல் கொண்டு நடத்தப்படும் நிகும்பலா யாகம் சிறப்பு வாய்ந்தது. இந்த யாகத்தில் கலந்து கொண்டு அம்பாளை மனமுருக பிரார்த்தனை செய்தால் சகல ஐஸ்வர்யங்களும் பெறுவர் என கூறப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த கோவிலில் புரட்டாசி, மகாளய அமாவாசையான நேற்று ஸ்ரீ மகா பிரத்தியங்கிரா தேவிக்கு சிறப்பு ஜபம் மற்றும் ஹோமம் நடத்தப்பட்டது. தொடர்ந்து மதியம் ஒரு மணிக்கு மங்கள வாத்தியங்கள் இசைக்க, வேத மந்திரம் ஓத, தண்டபாணி குருக்கள் யாக குண்டத்தில் மிளகாய் வற்றல் சேர்த்து நிகும்பலா யத்தை நடத்தி வைத்தார். தொடர்ந்து அம்பாளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.