பதிவு செய்த நாள்
02
அக்
2022
06:10
மயிலாடுதுறை: நவராத்திரியை முன்னிட்டு, தருமபுரம் ஆதீனத்தில் சதசண்டி மகாயாகம் சுவாசினி பூஜை, மரங்களுக்கு செய்யப்படும் விருட்ச பூஜை, தருமபுரம் ஆதீன குருமகா சன்னிதானம் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த தருமபுரத்தில் 600ஆண்டுகள் பழைமை வாய்ந்த சைவ ஆதீன மடாலயம் அமைந்துள்ளது. ஆலயத்தில் பழைமையான அஷ்ட தசபுஜ மகாலெட்சுமி துர்கா ( பதினெட்டு கைகளுடன் கூடிய) அம்பாளுக்கு தனி சன்னதி அமைந்துள்ளது. இங்கு நவராத்திரியை முன்னிட்டு, 9 நாட்கள் நடைபெறும் சதசண்டி மகாயாகம் கடந்த 23ம் தேதி கணபதி பூஜையுடன் துவங்கியது. நவசண்டி யாகம், நான்கு வேதங்கள் ஓதுதல், , நவ விளக்கு பூஜை, உள்ளிட்டவை நடைபெற்றன. இன்று, மரங்களுக்கு செய்யப்படும் விருட்சபூஜை, குழந்தை, குடும்பப்பெண்மனி, பிரம்மச்சாரி ஆகியோருக்கு தனித்தனியே கன்னியா பூஜை சுவாசினி பூஜை, கோபூஜை, குதிரைக்கு செய்யப்படும் அஸ்வ பூஜை, நடைபெற்றது. தொடர்ந்து அம்பாளுக்கு மஹாதீபாராதனை நடைபெற்றது. தருமபுரம் வேத சிவாகம பாடசாலை மாணவர்கள் வேதபாராயணம் செய்தனர். தேவார பதிகங்கள் ஓதப்பட்டன. நிகழ்ச்சியில் தருமபுரம் ஆதினம் 27வது குருமஹா சன்னிதானம், ஶ்ரீலஶ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.