பதிவு செய்த நாள்
03
அக்
2022
06:10
வடபழநி : வடபழநி ஆண்டவர் கோவில் சக்தி கொலு விழாவின் ஏழாம் நாளான நேற்று, கம்பாநதி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அம்பாள் அருள் பாலித்தார்.வடபழநி ஆண்டவர் கோவிலில் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு, சக்தி கொலு வைத்து கொண்டாடப்பட்டு வருகிறது. இதில், பிரதானமாக வீற்றுள்ள அம்பாளுக்கு தினசரி சிறப்பு அலங்காரங்கள் செய்யப்படுகின்றன.
நேற்று, கம்பாநதி அலங்காரத்தில், பக்தர்களுக்கு அம்பாள் அருள் பாலித்தார். விழாக்களின் போது எந்த பலனும் எதிர்பார்க்காமல் கோவில் முழுவதும் கோலமிடும், ரங்கவள்ளி ஆர்ட்ஸ் பவுண்டேஷனை சேர்ந்தவர்கள், சக்தி கொலுவின் ஏழாம் நாள் விழாவை குத்துவிளக் கேற்றி துவக்கி வைத்தனர். நேற்று காலை 7:30 மணி முதல் 12:30 மணி வரையும் மாலை 4:30 மணி முதல் இரவு 8:30 மணி வரையும் மீனாட்சி அம்மனுக்கும் உற்சவருக்கும் ஏகதின லட்ச்சார்ச்சனை நடைபெற்றது. தொடர்ந்து காலை, மாலையில் சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. மாலை லலிதா சகஸ்ரநாம பாராயணம், வேத பாராயணம், ஸ்ரீ ருத்ரம், சமஹம், ஸ்ரீ சுக்தம் நடந்தது. பின், பக்தர்களின் கொலு பாட்டு நடந்தது.நேற்று இரவு, வித்யாவாணி சங்கீத வித்யாலயா குழுவினரின் சிறப்பு பஜனை நடந்தது. குழந்தைளுடன் வந்த பெற்றோருக்கு 10 கேள்விகள் அடங்கிய தாள் வழங்கப்பட்டு, சரியான விடை அளித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.