பதிவு செய்த நாள்
04
அக்
2022
06:10
நவராத்திரி விழாவின் இறுதி நாளான மஹா நவமியான 9ம் நாள், கல்விக்கு அதிபதியான சரஸ்வதியின் ஆட்சிக் காலம். இந்த நாளில் நோன்பிருந்து நைவேத்யங்களைப் படைத்து, கலைக்கு ஆதாரமாகத் திகழும் கலைமகளை பாடி ஆடி, பரவசமுடன் வணங்குவோருக்கு கேட்ட வரத்தை சக்தியானவள், கைமேல் நல்குவாள் என்பது ஐதீகம்.முத்தொழில் புரியும் மும்மூர்த்திகளும் வணங்கும் பரம்பொருள்பராசக்தியே!அம்பிகை அருளைப் பெற, அந்த மங்கள நாயகியின் அம்சம் கலந்த கன்னி ராசியும், அந்த ராசிக்குரிய மாதமான புரட்டாசியில் வரும் நவராத்திரியில் வணங்குவது, மிகுந்த பலனை அளிக்கும்.மலை மகள், அலை மகள், கலை மகள் என்று துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முப்பெரும் தேவியரை வழிபடுவது, இந்த நவராத்திரி பூஜையில் தான் என்பது சிறப்புடையது. கொலு வைக்கும் பழக்கம் இல்லாதவர்கள் கூட சரஸ்வதி பூஜையை கொண்டாடுவர்.இன்று அன்னையை, ப்ராஹமி ஆக, சித்திதாத்ரியை வழிபட வேண்டும். வில், அம்பு, அங்குசம், சூலம் முதலியவைகளை தரித்த கோலத்தில் அம்பிகையை பூஜிக்க வேண்டும்.சிவசக்தி வடிவமாகிய காமேஸ்வரியாய் காட்சி அளிக்கிறாள். இது அரக்கர்களை அழித்த தோற்றம். அன்ன வாகனத்தில் இருப்பவள், வாக்கிற்கு அதிபதியாவாள்.ஞானசொரூபமானவள்; கல்விச்செல்வம் பெற அன்னையின் அருள் அவசியமாகும். சித்திதாத்ரி வடிவத்தை எடுப்பாள். எட்டு சித்திகளையும் சித்திதாத்ரி உள்ளடக்கியது என கூறப்படுகிறது.தாமரை மீது வசிக்கும் இவளை, அனைத்து சாதுக்கள், யோகிகள் மற்றும் சித்தர்கள் வணங்குகின்றனர். சித்தி என்றால் சக்தி என்றும்; தாத்ரி என்றால் தருபவள் என்றும் பொருள். சித்திதாத்ரி என்றால் பக்தருக்கு அனைத்து சக்தியையும் தருபவள் என்று பொருள்.இவளை வழிபாடு செய்து, அனைத்து சித்திகளையும் பெற்று, அர்த்தநாரீஸ்வரர் ஆனார் சிவன் என்பது புராணம்.அக்காலத்தில் போர் செய்வது அதிகமாக இருந்தபடியால் வாள், வேல் முதலியவற்றையும் பூஜிப்பர். இன்று தொழிற்சாலைகளில் உள்ள பெரிய இயந்திரங்களையும், வாகனங்களையும் அலங்கரித்து வழிபாடு நடத்துகின்றனர்.இந்த எளிய விழாவின் நோக்கம், வேலையை வழிபடு என்றகோட்பாட்டை வலியுறுத்துவதாகும்.
9ம் நாள் நவராத்திரி வழிபாடு: படிக்கும் புத்தகங்களை அடுக்கி, பேனா, பென்சில் போன்ற எழுதும் உபகரணங்களையும் அடுக்கி, அதன் மீது சரஸ்வதி தேவியின் உருவப்படத்தையோ, விக்கிரகத்தையோ வைத்து பூஜிப்பது வழக்கம்.வீட்டிலுள்ள சுவாமி படங்கள், பெட்டிகள், கதவு நிலைகள், ஜன்னல்கள் எல்லாவற்றிற்கும் சந்தனம், குங்குமம் இடுவது வழக்கம். கொலு வைக்கும் வழக்கம் இல்லாதவர்கள் கூட, சரஸ்வதி பூஜை அவசியம் செய்ய வேண்டும்.வண்டி வாகனங்களைத் துடைத்து, பொட்டு வைத்து, பூமாலை போட வேண்டும். அலுவலகங்களில் கூட ஆயுத பூஜை நடத்துவர். அனைத்து கலைகளுக்கும் அதிபதி என்பதால், நம்முடைய கலை சார்ந்த கலைப் பொருட்களையும் வைத்து பூஜை செய்யலாம்.பச்சைக்கற்பூரம் கொண்டு ஆயுதக்கோலம் போடுவது சிறப்பு வழக்கம். மல்லிகை, பிச்சி, துளசி, தாமரை மலர்களால் ஆன மாலையை அம்மனுக்கு சூட்டி வணங்குவது வழக்கம்.பாசிபயறு, சுண்டல், கற்கண்டு சாதம், அக்கார வடிசல் போன்ற நிவேதனங்களோடு உளுந்து வடை, பாயசம், பச்சடி, கறிவகைகள் என, விருந்தாக சமைப்பது வழக்கம்.இரு வேளையும் விளக்கேற்றி, மானசீகமாக அன்னை கொலுவில் எழுந்தருளப் பிரார்த்தித்து, அஷ்டோத்திரம் சஹஸ்ரநாமம் சொல்லி, அம்பிகையைப் பூஜிக்கலாம்.பூஜை முடிவில், யாராவது ஒருவருக்கேனும் தாம்பூலம் தருவது நல்லது.பக்தி ஒன்றே அம்பிகை நம்மிடம் வேண்டுவது; ஆடம்பர அலங்கார செலவினங்களை அல்ல.
பாடல்
வெண்டா மரைக்கன்றி நின்பதம் தாங்க என் வெள்ளையுள்ளத்தண்டா மரைகுத் தகாது கொலோ சகமேழுமளித்துஉண்டானுறங்க ஒழித்தான் பித்தாக உண்டாக்கும் வண்ணம்கண்டான் சுவைகொள் கரும்பே சகலகலா வல்லியே!
சரஸ்வதி எனும் ஞானத்தின்
நவாம்சம்
வாகீஸ்வரி,
சித்ரேஸ்வரி,
துளஜா,
கீர்தீஸ்வரி,
அந்திரி,
கட சரஸ்வதி,
நீல சரஸ்வதி,
கிளி சரஸ்வதி,
குலைவாணி
- நவராத்திரி சக்தி ஆராதனை என்பது, மானுட சக்தியை துாண்டும், பெருக்கும் ஆராதனை ஆகும்.
ஆன்ம தரிசனம்
ஆயுதத்தின் உண்மையான பலனை உணரத்தான் ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. உயிர் உள்ள பொருட்கள் மற்றும் உயிர் இல்லாத பொருட்கள் அனைத்திலும் இறைத்தன்மை உறைந்துள்ளது.வாழ்க்கையில் நம் உயர்வுக்கு உதவும் ஆயுதங்களை வணங்குவதற்காகவும், தொழில்கள் சிறப்பாக நடந்ததற்கு இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், வரும் காலங்களில் தொழில் சிறப்பாக நடப்பதற்காகவும் வேண்டி 9ம் நாள் சிவராத்திரி ஆயுத பூஜையாக கொண்டாடப்படுகிறது.நம்மிடமுள்ள மாயை திரையை, ஒருவித கருவியால் நீக்கி, உள்ளே கடவுளை ஆன்ம தரிசனம் செய்வதே கலை மகள் வழிபாடாகும்.
திருஷ்டி சிதறும்
சண்டிதேவியை ஆத்மார்த்தமாக ஆராதித்து, பூஜையை முடித்த பின்னர் பூசணிக்காய், குங்குமம் கலந்து வாசலில் உடைக்க வேண்டும்.பிறர் பார்வையின் மூலம், நம்மை தாக்கும் பொறாமை போன்ற திருஷ்டிகள், இந்த பூசணிக்காய் சிதறி தெறித்து போவது போல் சிதறி விடும். சிறிது நேரத்தில் அந்த உடைந்த பூசணிக்காயை, சாலையிலிருந்து சுத்தப்படுத்தி விடுவது நல்லது.