ஸ்ரீரங்கத்தில் விஜயதசமி : நம்பெருமாள் வன்னி மரத்தில் அம்பு போடும் நிகழ்ச்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05அக் 2022 08:10
ஸ்ரீரங்கம் : நவராத்திரி உற்சவத்தின் 10ம் திருநாளான நாளை ஸ்ரீரங்கம் உற்சவர் ஸ்ரீநம்பெருமாள் அதிகாலையில் மூலஸ்தானத்தில் இருந்து பல்லக்கில் புறப்பட்டு , கீழக்கோட்டை வாசல் மார்க்கமாய் வெளியேறி வழிநடை உபயங்கள் கண்டருளி, காட்டழகிய சிங்கர் கோயிலில் உள்ள ரங்க மண்டபத்தில் எழுந்தருள்வார். திருவராதனம் முடிந்த பிறகு, மாலையில் தங்க குதிரை வாஹனத்தில் ஸ்ரீநம்பெருமாள் எழுந்தருள்வார். தட்டுகாரர் என்ற கைங்கரியபரர் உடுப்புகள் தரித்து, ஸ்ரீநம்பெருமாளுடைய வில்லையும், அம்பையும், எடுத்துக் கொண்டு, ரங்க மண்டபத்தை சுற்றி வந்து ஸ்ரீநம்பெருமாளிடம் வில்லையும் அம்பையும் கொடுப்பார். வில் , அம்புடன் நம்பெருமாள் சிங்கர் சந்நதி வாசலிலுள்ள நாலுகால் மண்டபத்திற்கு எழுந்தருள்வார். அர்ச்சகர் மற்றும் கோயில் புரோஹிதரர் இருவரும் எதிரிலுள்ள வன்னி மரத்தடியில் மரத்துக்குத் திருவாரதனம் செய்வார்கள். பின் அர்ச்சகர் நம்பெருமாளிடம் வந்து கையில் வில்லைப் பிடித்து நாலு திக்கும் நாலு அம்பு போடுவார். (விஜயதசமி அன்று தான் ஸ்ரீகிருஷ்ண பகவான் பாண்டவர்களுக்கு குருசேஷத்தர போருக்கு தேவையான அம்பு, வில் போன்ற ஆயுதங்களை கொடுத்து வெற்றிக்கு வழி வகுத்ததாக கூறப்படுகிறது). பின்னர் ஸ்ரீநம்பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் புறப்பாடு கண்டருளி, மூலஸ்தானத்திற்கு எழுந்தருள்வார்.