முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் அருகே கீரனூர் அரியநாச்சி அம்மன் கோயில் முளைப்பாரி விழா நடந்தது. இதனை முன்னிட்டு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பக்தர்கள் காப்புகட்டி விரதம் இருந்து வந்தனர். தினந்தோறும் ஆண்கள் ஒயிலாட்டம் ஆடியும், பெண்கள் கும்மி அடித்தும் வந்தனர்.தினந்தோறும் சிறப்புபூஜை நடந்தது. முளைப்பாரி விழாவை முன்னிட்டு பிள்ளையார் கோயிலில் இருந்து காப்பு கட்டிய பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக கோயிலுக்கு சென்றனர். பின்பு மூலவரான அரியநாச்சி அம்மனுக்கு பால்,சந்தனம்,மஞ்சள் உட்பட 21 வகையான அபிஷேகம், சிறப்புபூஜை நடந்தது.கிராமமக்கள் பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். முளைக்கொட்டு திண்ணையில் இருந்து முளைப்பாரி தூக்கி கிராமத்தின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக சென்றனர்.