பதிவு செய்த நாள்
05
அக்
2022
11:10
மயிலாடுதுறை: திருக்கடையூர் அபிராமி அம்பாள் சமேத அமிர்தகடேஸ்வரர் கோயில் சார்பில் திருக்கடையூரில் அமைக்கப்பட்டுள்ள இசைக்கல்லூரியை தருமபுரம் ஆதீனம் தொடங்கி வைத்தார்.
தருமபுரம் ஆதீனத்திருமடத்தில் உள்ள சொக்கநாதர் பூஜைமடத்தில் விஜயதசமியையொட்டி நடைபெற்ற இவ்விழாவில், தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், இசைக்கல்லூரிக்கான விண்ணப்பப் படிவத்தை வழங்கி தொடங்கி வைத்தார்.
இந்த இசைப்பள்ளியில் மிடற்றிசை (வாய்ப்பாட்டு), நாதஸ்வரம், தவில், பரதநாட்டியம், வீணை, புல்லாங்குழல், வயலின், மிருதங்கம் ஆகியன முதன்மை பாடங்களாகவும், தேவாரப் பண்ணிசை, நாதஸ்வரம், தவில், பரதநாட்டியம், நட்டுவாங்கம், கஞ்சிரா, கடம், முகர்சங்கு, ஆர்மோனியம் ஆகியன துணைப்பாடங்களாகவும் பயிற்றுவிக்கப்பட உள்ளன. தொடக்கவிழாவில் 7 மாணவர்கள் இசைக்கல்லூரியில் பயில விண்ணப்பித்து இணைந்தனர். தொடர்ந்து நடைபெற்ற தையல் தொழில் வேலைவாய்ப்பு துவக்க விழாவில், ஆதீன வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள முத்தையா கார்மென்ட்ஸ்" ஆயத்த ஆடைகள் தயாரிப்பு நிலையத்தை குருமகா சந்நிதானம் திறந்துவைத்தார். விழாவில், தருமபுரம் ஆதீனக்கட்டளைத் தம்பிரான் சுவாமிகள், ஆதீன கோவில்களின் தலைமை கண்காணிப்பாளர் மணி, தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரி முதல்வர் சுவாமிநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.