சீர்காழி அண்ணன் பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம் தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06அக் 2022 07:10
மயிலாடுதுறை: சீர்காழி அடுத்த அண்ணன் பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம் தேரோட்டம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் வடம்பிடித்து தேர் இழுத்து வழிபாடு செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த அண்ணன் கோயில் என்றழைக்கப்படும் திருவெள்ளக்குளம் கிராமத்தில் 108 வைணவத் திருத்தலங்களில் 39வது திவ்யதேசமான, குமுதவல்லி தாயார் சமேத ஸ்ரீஅண்ணன் பெருமாள் கோயில் அமைந்துள்ளது.குமுதவள்ளி தாயார் அவதரித்த இத்தலத்தில் அண்ணன் பெருமாளை வேண்டி திருமங்கை ஆழ்வார் 10 பாசுரங்கள் பாடி மங்களாசாசணம் செய்துள்ளார். இத்தகைய சிறப்பு வாய்ந்த கோயிலில் ஆண்டு தோறும் திருப்பதியை போன்று புரட்டாசி மாதம் 12நாட்கள் பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி நிகழாண்டு பிரம்மோற்சவம் கடந்த மாதம் 27ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நாள்தோறும் பெருமாள் தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம், சாத்துமுறை, வழிபாடு, கருடன், குதிரை போன்ற வாகனங்களில் வீதியுலா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று காலை தேரோட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது முன்னதாக சீதேவி, பூதேவி சமேத உற்சவர் அண்ணன் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், சாத்துமுறை நடைபெற்றது. தொடர்ந்து மலர்கள் ஆபரணங்கள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத பெருமாள் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் எழுந்தருள ,தொடர்ந்து சிறப்பு வழிபாடு செய்யப்பட்டு திருத்தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரினை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர் . நான்கு வீதிகளின் வழியாக தேர் வலம் வந்து பிற்பகல் மீண்டும் நிலையை வந்தடைந்தது.