கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில் விழாவில் பரிவேட்டை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06அக் 2022 06:10
நாகர்கோவில்: கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில் நவராத்திரி திருவிழாவில் நேற்று பரிவேட்டை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். நவராத்திரி திருவிழா செப்., 26ல் தொடங்கியது. நிறைவு நாளான நேற்று 10:15 மணிக்கு பகவதி அம்மன் கொலு மண்டபத்தில் இருந்து வெள்ளிக்குதிரையில் பரிவேட்டைக்காக எழுந்தருளினார். 11:30க்கு வெள்ளிக்குதிரையில் அலங்காரத்துடன் கோயிலில் இருந்து வெளிவந்த போது போலீசார் துப்பாக்கி ஏந்தி மரியாதை செலுத்தினர். அலங்கரிக்கப்பட்ட யானை, குதிரைகள் அணிவகுக்க பவனி ரதவீதியை சுற்றி விவேகானந்தபுரம் வழியாக மாலை 6:00 மணிக்கு பஞ்சலிங்கபுரம் வந்தது.இங்கு பாணாசுரனை பகவதி அம்மன் வதம் செய்தார். நள்ளிரவில் பவனி கோயிலை வந்தடைந்ததும் கோயிலின் கிழக்கு வாசல் திறக்கப்பட்டு முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு நடந்தது. விழாவில் அமைச்சர் மனோதங்கராஜ், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.