பொருசுபட்டியில் பாண்டியர் கால பெருமாள் சிலை கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17அக் 2022 10:10
மானாமதுரை : மானாமதுரையில் முற்கால பாண்டியர் காலத்தைச் சேர்ந்த பெருமாள் சிற்பம் சிதைந்த நிலையில் இருப்பதை வரலாற்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
பாண்டியநாடு பண்பாட்டு மையத்தைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர்கள் மீனாட்சி சுந்தரம், தாமரைக்கண்ணன் மற்றும் சமயக்குமார் ஆகியோர் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே பொருசுபட்டியில் ஒரு பழமையான பெருமாள் சிற்பத்தை கண்டுபிடித்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், பொதுவாக பாண்டிய மன்னர்களின் ஆட்சிப்பகுதிகளான மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை போன்ற பகுதிகளில் முற்கால பாண்டியர்களின் தடயங்கள் பெருமளவு கிடைத்து வருகின்றன.அவற்றின் தொடர்ச்சியாக தற்போது
இந்த சிற்பமானது 3 துண்டுகளாக உடைந்து காணப்படுகிறது. மூன்றடி உயரம் கொண்ட இந்த சிற்பம் தலையில் கிரீட மகுடம் தரித்தும், மார்பில் ஆபரணங்களும் முப்புரி நூலும் தெளிவாக இந்த புடைப்பு சிற்பத்தில் செதுக்கப்பட்டுள்ளது. இடையில் இடைக்கச்சை கால்வரையிலும் செதுக்கப்பட்டுள்ளது. 2 கால்களிலும் வீரக்கழலை அணிந்த படியும் கைகள் நான்கும் புஜங்களுக்கு கீழாக முற்றிலும் சிதைந்து காணப்படுகிறது. சிலையின் இடதுபுறம் ஒரு சங்கு தெளிவாக தெரிகிறது. வலதுபுறம் சக்கரம் சற்றே சிதைந்து காணப்படுகிறது. மேலும் முற்கால பாண்டியர்களுக்கே உரித்தான கலைநயத்துடன் இந்த சிற்பம் நின்ற கோலத்தில் சிறப்பான முறையில் செதுக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை பார்க்கும்போது இந்த பகுதியில் ஒரு பெருமாள் கோயில் இருந்திருக்க வேண்டும். பின்னாளில் அந்நிய படையெடுப்பினாலோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ சிதைந்து போயிருக்கலாம். தற்போது இந்த சிலை வழிபாட்டில் இருந்துவருகிறது. மேலும் இந்த சிற்பம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கலாம், என்றனர்.