புனிதமான கங்கை ஐப்பசி மாதத்தில் காவிரியில் நீராடித் தன் பாவத்தைப் போக்குவதாக ஐதீகம். இந்த மாதத்தில் துலாம் ராசியில் சூரியன் சஞ்சரிக்கும். அதனால் ஐப்பசி நீராடலை ‘துலா ஸ்நானம்’ என்று சொல்வர். ஐப்பசி முழுவதும் (அக்.18– நவ.16 ) பெண்கள் அதிகாலையில் எழுந்து (4:30 – 6:00 மணி) நீராடி காவிரி நதிக்கு பூஜை செய்து, மஞ்சள், குங்குமம், தாம்பூலத்தை சுமங்கலிகளுக்கு தானமாக கொடுப்பர். காவிரி கரையோர மக்களிடம் இந்த வழக்கம் உள்ளது. இந்த ஊர்களை பூர்வீகமாக கொண்டவர்கள் வெளியூர்களில் வாழ்ந்தாலும் கிணறு, குழாயடியில் மாக்கோலமிட்டு காவிரிக்கு நன்றி செலுத்தும் விதத்தில் பூஜிப்பர். பஞ்ச பூதங்களில் ஒன்றான நீருக்கு நன்றி செலுத்தவும், பாவம் நீங்கி புண்ணியம் சேரவும் துலா ஸ்நானம் செய்வது அவசியம்.