தேவர்களின் தந்தையான கஷ்யப முனிவருக்கும், அசுரேந்திரன் என்பவனின் மகள் மாயைக்கும் சூழல் காரணமாக திருமணம் நடந்தது. அவர்களுக்கு சூரபத்மன், சிங்கமுகன், தாரகாசுரன் உள்ளிட்ட அசுரர்களும், அஜமுகி என்னும் மகளும் பிறந்தனர். இதில் சூரபத்மன் தவமிருந்து, சிவபெருமானைத் தவிர வேறு யாராலும் தன்னைக் கொல்ல முடியாது என வரம் பெற்றான். அதன்பின் ஆணவத்தால் தேவர்களைத் துன்புறுத்த தொடங்கினான். தேவர்கள் தங்களைக் காப்பாற்றும்படி சிவனைச் சரணடைந்தனர். சிவன் தன் நெற்றிக் கண்ணில் இருந்து ஆறு தீப்பொறிகளை உண்டாக்க, அவை சரவணப் பொய்கையில் விழுந்து குழந்தைகளாக மாறின. அக்குழந்தைகளை கார்த்திகைப் பெண்கள் வளர்த்து ஆளாக்கினர். பார்வதி அந்த ஆறு குழந்தைகளையும் சேர்த்து அணைக்க, ஆறுமுகமும், பன்னிரு கைகளுமாக ஒரே உருவமாக்கினாள். ‘கந்தன்’ எனப் பெயர் பெற்ற அக்குழந்தைக்கு, தன் சக்தியெல்லாம் திரட்டி வேலை பரிசளித்தாள். வேலுடன் புறப்பட்ட கந்தன், சூரபத்மனை சம்ஹாரம் செய்து தேவர்களைக் காப்பாற்றினார். இதனடிப்படையில், ஐப்பசி அமாவாசைக்கு மறுநாளான வளர்பிறை பிரதமை முதல் சஷ்டி வரை (அக்.25 – அக்.30) விரதம் மேற்கொள்வர். ஆறாவது நாளான சஷ்டியன்று சூரசம்ஹாரம் நடத்தப்படும். கணவனும், மனைவியும் சேர்ந்து சஷ்டி விரதமிருக்க நல்ல குழந்தைகள் பிறப்பர்.