சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஐப்பசி பூரம் உற்சவத் தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21அக் 2022 04:10
சிதம்பரம்: உலகப் புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் சிவகாமசுந்தரி அம்மனுக்கு ஐப்பசி பூரம் உற்சவத் தேரோட்டம் நடந்தது.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் சிவகங்கை குளத்திற்கு எதிரில் தனி சன்னதியில் எழுந்தருளியிருக்கும் சிவகாமசுந்தரி அம்மனுக்கு ஐப்பசி பூரம் உற்சவம் கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனையொட்டி அம்மனுக்கு, சிறப்பு அபிஷேகம் அலங்காரம், சிறப்பு பூஜை, தீபராதனைகள் நடந்தது. இரவு அம்மன் வீதியுலா நடந்தது. ஐப்பசி பூரம் உற்சவத்தையொட்டி சிவகாமசுந்தரி அம்மன் திருத்தேரோட்டம் நடந்தது.அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, அம்மன் சிறப்பு அலங்காரத்தில் புறப்பாடாகி கீழ வீதி கோபுர வாசல் அருகே திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்துச் சென்றனர். தேர் நான்கு முக்கிய வீதியில் வலம் வந்து நிலையை அடைந்தது. மாலை பட்டு வாங்கும் உற்சவம் மற்றும் பூர சலங்கை உற்சவம் நடந்தது. நாளை காலை தபசு உற்சவம், இரவு சிவானந்த நாயகி சமேத சோமாஸ்கந்தர் திருக்கல்யாண உற்சவமும் நடக்கிறது. ஏற்பாடுகளை நடராஜர் கோயில் பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.