திண்டிவனம்: திருவிழா நடத்துவதற்கு தாசில்தார் தடை விதித்துள்ளார்.திண்டிவனம் வசந்தபுரம் பகுதியில் விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவில் நிர்வாகத்தை நடத்த தங்களுக்குதான் உரிமை உள்ளது என்று, அந்த பகுதியில் மனைகள் வாங்கிய 91 பேர் கொண்ட குழுவினருக்கும், அனைவருக்கும் உரிமை உள்து என்று அவரப்பாக்கம் பகுதியை சேர்ந்த மற்ற தரப்பினருக்கும் பிரச்னை இருந்து வந்தது.இப்பிரச்னை குறித்து திண்டிவனம் தாலுகா அலுவலகத்தில் அமைதிக் குழு கூட்டம் நடந்தது. தாசில்தார் கோபால்சாமி தலைமை தாங்கினார். துணை தாசில்தார் வேணு, வருவாய் ஆய்வாளர் குப்பன், வி.ஏ.ஓ., முல்லைவேந்தன், ரோஷணை போலீசார் மற்றும் இரு தரப்பு பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். கூட்ட முடிவில் தாசில்தார் கோபால்சாமி பேசுகையில், இரு தரப்பினருக்கும் பொதுவான அர்ச்சகரை நியமனம் செய்துக் கொள்ள வேண்டும். அர்ச்சகர் கோவில் சாவியை, ரோஷணை போலீசில் ஒப்படைக்க வேண்டும். அவர் தினமும் போலீஸ் நிலையத்தில் சாவியை பெற்று பூஜையை நடத்த லாம். கோர்ட் இறுதி தீர்ப்பு வரும் வரை, கோவிலில் திருவிழா நடத்தக் கூடாது என கூறினார்.