பதிவு செய்த நாள்
31
அக்
2022
02:10
போபால், மத்திய பிரதேசத்தில் கோவிலில் திருடிச் சென்ற பொருட்களை, மன்னிப்பு கடிதத்துடன் திருடன், திரும்ப வைத்துச் சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.
ம.பி., மாநிலம் பாலகாட் மாவட்டத்தில் லம்பா என்ற பகுதியில் ஜெயின் சமூகத்தினருக்குச் சொந்தமான, சாந்திநாத் திகம்பர் ஜெயின் என்ற கோவில் உள்ளது. சமீபத்தில் இந்த கோவிலுக்கு வந்த திருடன், ஆள் இல்லாத நேரம் பார்த்து விளக்கு, பூஜை பொருட்கள், அலங்கார பொருட்கள் ஆகியவற்றை திருடிச் சென்றான். இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, திருடனை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், ஒரு வாரம் கழித்து அந்த கிராமத்தில் ஒரு பை கிடந்தது. அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் வந்து சோதனையிட்டபோது, அதற்குள் கோவிலில் திருடப்பட்ட பொருட்கள் அனைத்தும் இருந்தன. மேலும், ஒரு கடிதமும் இருந்தது. அதில், இந்த பொருட்களை திருடிச் சென்றதில் இருந்து எனக்கு பல சோதனைகள் ஏற்படுகின்றன. இதனால் இவற்றை திரும்ப வைக்கிறேன்; என்னை மன்னித்து விடுங்கள் என, திருடன் எழுதியிருந்தான். இந்த கடிதத்தை கைப்பற்றிய போலீசார், திருடனை தீவிரமாக தேடி வருகின்றனர்.