பதிவு செய்த நாள்
27
ஆக
2012
11:08
சாயர்புரம்: புதுக்கோட்டை அருகே உள்ள கூட்டாம்புளியில் சந்தன முத்துமாரி அம்மன் கோயில் கொடை விழா இன்று நடக்கிறது.கூட்டாம்புளி சந்தன முத்துமாரி அம்மன் கோயில் கொடை விழா ஆண்டுதோறும் ஆவணி மாதம் நடைபெறுவது வழக்கம். அதே போல் இந்த ஆண்டு நடக்கிறது. கோடை விழாவை முன்னிட்டு கடந்த 21ம் தேதி கால்நட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. 26ம் தேதி இரவு திருவிளக்கு பூஜை வழிபாடும், சான்றோர் கலைக்குழுவின் அய்யாவழி இன்னிசை கச்சேரியும் நடந்தது. இன்று இரவு கவிதாலயாவின் அய்யாவின் இன்னிசை கச்சேரி நடக்கிறது. கொடை நாளான 28ம் தேதி செவ்வாய் கிழமை காலை அம்மனுக்கு தீர்த்த நீராடி ஊர்வலம் வருதல், 7 மணிக்கு அன்னதானம் நடக்கிறது. தொடர்ந்து காலை 11 மணிக்கு நெல்லை கிருஷ்ணம்மாள் குழுவினரின் வில்லிசையும், மதியம் அம்மனுக்கு சிறப்பு பூஜையும் நடக்கிறது. அதை தொடர்ந்து பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. அன்றிரவு 10 மணிக்கு சிருங்காரி மேளம், நையாண்டி மேளத்துடன் கரகாட்டம் நடக்கிறது. தொடர்ந்து நள்ளிரவு அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துதல், அம்மனுக்கு முளைப்பாரி எடுத்தல், அம்மனுக்கு சிறப்பு பூஜை, உற்சவ அம்மன் பூஜை, வாண வேடிக்கையுடன் இராஜ மேளம் முழங்க, யானை முன்செல்ல, அம்மன் சப்பர பவனி வருதல் ஆகியவை நடக்கிறது. 29ம் தேதி மதியம் அம்மனுக்கு பொங்கல் வைத்தல், அம்மன் மஞ்சள் நீராடுதல், அம்மனுக்கு மதிய பூஜை, முளைப்பாரி பெண்கள் கும்மிகொட்டி அம்மன் வாழ்த்து பாடுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது. மதியம் 3 மணிக்கு வரிப்பழம் பகிர்தல் நடக்கிறது. அன்றிரவு மகிழ்ச்சியான குடும்பம் அமைய காரணம் கணவனின் சம்பாத்தியமா? மனைவியின் சம்பாத்தியமா? என்ற தலைப்பில் இன்னிசை சிரிப்பு பட்டிமன்றம் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் பூசாரி செந்தூர்பாண்டி, கோயில் நிர்வாகிகள் சேகர், குணபாலன், ஐயங்கோபால், தங்கலிங்கம் மற்றும் நிர்வாக கமிட்டியினர், வரிதாரர்கள் செய்துள்ளனர்.