பதிவு செய்த நாள்
03
நவ
2022
11:11
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் மாமன்னன் ராஜராஜ சோழனின் 1037 வது சதய விழாவை முன்னிட்டு, பெருவுடையாருக்கு 48 வகையான பேராபிஷேகம் நடந்தது. ராஜராஜசோழனின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
தஞ்சாவூர் பெரியகோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜசோழன் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தில் பிறந்த நிலையில், ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதத்தில் வரும் சதய நட்சத்திரத்தில் வெகு விமர்சையாக சதய விழா கொண்டப்பட்டு வருகிறது. அதன்படி, இந்தாண்டு சதய விழா நேற்று (02ம் தேதி) பல்வேறு நிகழ்ச்சியுடன் விழா துவங்கியது.
தொடர்ந்து, காலை (3ம் தேதி) மங்கல இசையுடன் விழா துவங்கியது. பின்னர், தருமபுர ஆதீனம் 27 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் திருக்கோவில் பணியாளர்களுக்கு புத்தாடை வழங்கினார். தொடர்ந்து, ராஜராஜ சோழன் மீட்டெடுத்த, தேவார நூல், ராஜராஜ சோழன் சிதம்பரத்தில் தேவாரம் நூல் மீட்க சென்றபோது ஓதுவார்களால் இசைக்கப்பட்ட சகோட யாழ் இசைக்கருவிக்கு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர், தேவார நூல்களை யானை மீது ஏற்றி, மங்கல வாத்தியங்கள், சிவ பூத இசைக்கருவிகள் வாசிக்கப்பட்டு, கோவிலில் இருந்து தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த 48 ஓதுவார்கள், திருமுறை வீதிகளாக தேவாரம் பாடியபடி, சோழன் சிலையை சென்றடைந்தனர். அங்கு, மாமன்னன் ராஜராஜசோழன் சிலைக்கு மாவட்ட நிர்வாகம், சதய விழா குழு, அரண்மனை தேவஸ்தானம் சார்பில், மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், காவல் கண்காணிப்பாளர் ரவளி பிரியா, சதய விழா குழு தலைவர் செல்வம், அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே, திருவையாறு எம் எல் ஏ துரை. சந்திரசேகரன், தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் உள்ளிட்டார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சியினர் சார்பில் ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
கோவிலில், குஜராத்திலிருந்து மீட்டு கொண்டுவரப்பட்ட ராஜராஜசோழன், உலகமாதேவி உலோகசிலைகள் முன்பாக புனித நீர் அடங்கிய கடங்கள் வைத்து சிவச்சாரியர்கள் சிறப்பு யாகம் நடத்தினர். அப்போது, ராஜராஜ சோழன், உலகமாதேவி சிலைக்கு ராஜா ராணி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து, பெருவுடையாருக்கும், பெரியநாயகி அம்மனுக்கும் மஞ்சள், சந்தனம், பால், தயிர் உள்ளிட்ட 48 மங்கள பொருட்களால் பேரபிஷேகமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. தொடர்ந்து மாலை பல்வேறு நிகழ்ச்சிகளும், இரவு ராஜராஜசோழன் மற்றும் உலகமாதேவிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வீதி உலாவுடன் நிகழ்ச்சி நிறைவு பெறுகிறது.