பதிவு செய்த நாள்
03
நவ
2022
03:11
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா வெகு விமரிசையாக நடந்தது. வழக்கத்தைவிட அதிக எண்ணிக்கையில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். கோயிலில் ரூ 300 கோடி மதிப்பில் நடக்க இருக்கும் பெருந்திட்ட பணிகள் துவங்கியது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் வைகாசி விசாகம், மாசி விழா, கந்த சஷ்டி விழா, தேரோட்டங்கள் என ஆண்டு முழுவதும் விழாக்கோலம் காண்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பாதிப்பினால் பக்தர்களின் பங்களிப்பின்றி கோவில் வளாகத்தில் விழா நடந்தது. இந்த ஆண்டு கந்த சஷ்பு விழாவில் வழக்கத்தை விட அதிக எண்ணிக்கையில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். கோயிலில் பெருந்திட்ட பணிகள் துவங்கி இருப்பதால் கோயில் பிரகாரத்தில் விரதம் இருக்க இந்த ஆண்டு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. எனவே பக்தர்களுக்கு 18 கொட்டகைகள் அமைக்கப்பட்டிருந்தன. வழக்கத்தை விட அதிகமான எண்ணிக்கையில் கழிப்பறை வசதிகளும் செய்யப்பட்டிருந்தன. கோயில் வளாகத்திலும் பிரகாரத்திலும் ஆக்கிரமித்து இருந்த நூற்றுக்கணக்கான கடைகள் அப்புறப்படுத்தப்பட்டு வேறு தனி இடத்தில் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் பக்தர்கள் நெருக்கடியின்றி வந்து போக முடிகிறது. கடற்கரை முழுவதும் பக்தர்களிடையே நெருக்கடி, தள்ளுமுள்ளு ஏற்படாத வண்ணம் கட்டைகளால் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. தனியார் அன்னதான கூடங்களின் அருகிலும் பக்தர்கள் சாப்பிட்டு விட்டு வீசும் தட்டுகள் இலைகளை அப்புறப்படுத்த தூய்மை பணியாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். கடற்கரையில் மட்டுமின்றி கோயில் வளாகத்திலும் பக்தர்கள் கூடியிருந்த இடங்களிலும் சூரசம்ஹார காட்சியைக் காண எல்.இ.டி திரைகள் அமைக்கப்பட்டிருந்தன. விழா சிறப்பாக நடப்பதற்காக ஹிந்து அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபுஅதிகாரிகளுடன் அடிக்கடி ஆய்வு மேற்கொண்டார். திருநெல்வேலி டி.ஐ.ஜி.,பிரவேஷ் குமார், எஸ்.பி.சரவணன், தூத்துக்குடி எஸ்.பி. பாலாஜி சரவணன் தலைமையில் 3000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
பெருந்திட்டப்பணிகள் துவக்கம்: திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் மற்றும் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் முருக பக்தர்கள் வந்து செல்கின்றனர். எனவே கோயில் வளாகத்தில் இன்னும் சிறப்பாக வசதிகள் ஏற்படுத்தி தருவதற்காக பெருந்திட்ட பணிகள் துவங்கியுள்ளன. இதற்கு திருச்செந்தூர் மண்ணின் மைந்தர் எச்.சி.எல். கம்ப்யூட்டர் நிறுவன அதிபர் சிவ் நாடார் தமது வாமசுந்தரி இன்வெஸ்ட்மென்ட் நிறுவனம் சார்பில் ரூ 200 கோடி வழங்கியுள்ளார். ஹிந்து அறநிலையத்துறை நிதி௹ 100 கோடி சேர்த்து மொத்தம் ரூ 300 கோடியில் பல்வேறு திட்ட பணிகள் நடக்க உள்ளன.
காத்திருப்பு ஹால்: திருச்செந்தூர் கோயிலில் தரிசனம் மேற்கொள்ள ரூ 100 கட்டணம், தர்ம தரிசனம் என இரண்டு வரிசைகள் உள்ளன. இரண்டிலுமே பக்தர்கள் அதிகம் வருகின்றனர். பக்தர்கள் கால் கடுக்க நிற்க வேண்டி இருப்பதால் தற்போதுள்ள கலையரங்கம் துவங்கி வள்ளி குகை நுழைவு அருகே சென்று கோயில்வாசல் வரையிலும் இடது புறமாக அமர்ந்து வரிசையில் செல்லும் ஹால் கட்டப்பட உள்ளது. அதில் உட்கார்ந்து செல்லும் வகையிலும் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட வசதிகளும் அமைக்கப்படுகிறது. இதன் மூலம் பக்தர்கள் மன உளைச்சல் இன்றி முருகப்பெருமானை பொறுமையாக தரிசிக்க முடியும்.
அன்னதான கூடம் : திருச்செந்தூர் கோயிலில் முன்பு மற்ற கோயில்களை போல தினமும் சுமார் 400 பேர் மட்டுமே மதிய அன்னதானம் பெற்றனர். தற்போது காலை 8 மணிக்கு முதல் இரவு 8 மணி வரையிலும் முழு சாப்பாடு அன்னதானமாக வழங்கப்படுகிறது. சோறு, சாம்பார், இரண்டு வகை கூட்டு, ரசம், மோர் என ஒரு நபருக்கு ரூ 45 மதிப்பில் சாப்பாடு வழங்கப்படுகிறது. தினமும் 4000 முதல் 5000 பேர் வரையிலும் விழா நாட்களில் 6000 பேரும் சாப்பிடுகின்றனர். இதற்காக தினமும் ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் செலவு ஏற்படுகிறது. அன்னதானத் திட்டத்தில் ஏழை எளியவர் மட்டுமின்றி வசதியானவர்களும் பயன்பெறுகின்றனர். 60 பேர் சமையல் மற்றும் சப்ளை பணியாளர்கள் உள்ளனர். ஊழியர்களின் மாத ஊதியமாக ரூ 7 லட்சம் செலவாகிறது. தற்போதைய புதிய திட்டத்தின்படி அன்னதான கூடம் கோயில் அருகில் தரைத்தளம் மற்றும் முதல் தளத்துடன் ஒரே நேரத்தில் ஆயிரம் பேர் உணவருந்தும் வகையில் பிரமாண்ட கட்டடம் கட்டப்பட உள்ளது. கோயிலில் நடக்கும் சிறப்பான திட்டங்களில் அன்னதானமும் ஒன்றாகும். ஆனால் அன்னதானத்திற்குரிய நிதியில் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது.
அறுபடை வீடுகள்: திருச்செந்தூர் பெருந்திட்ட பணிகளில் கடற்கரை பகுதியில் தற்போதுள்ள நாழிக்கிணறு செல்லும் ஓடுகள் வேய்ந்த பாதை அகற்றப்படுகிறது. அதுவரையிலும் கடற்கரையை இன்னும் விரிவுபடுத்திட திட்டம் உள்ளது. நாழிக்கிணறு செல்லும் பாதையும் நாழிக்கிணறும் முற்றிலுமாக மாற்றி அமைக்கப்பட உள்ளன. அதே பகுதியில் அறுபடை வீடுகளில் மற்ற ஐந்து படை வீடு கோயில்களின் மாதிரி ஏற்படுத்தி பக்தர்கள் வழிபட திட்டமும் உள்ளது. திருச்செந்தூருக்கு வந்தால் அறுபடை வீடுகளையும் தரிசித்த திருப்தி ஏற்படும்.
பக்தர்கள் தங்குவதற்காக தற்போது 150 அறைகளுடன் யாத்ரிகர் நிவாஸ் எனும் புதிய தங்கும் வளாகம் கட்டப்பட்டு வருகிறது. கோயில் அருகில் இரண்டு இடங்களில் அதிக எண்ணிக்கையில் கார்கள், வாகனங்கள் நிறுத்துவதற்கான வளாகமும் ஏற்படுத்தப்படுகிறது. கோயிலுக்கு எதிர்புறம் கடற்கரைக்கு மேல்புறம் நாழிக்கிணறுக்கு தென்மேற்கில் புதிதாக இரண்டு திருமண மண்டபங்கள் கட்டப்பட உள்ளன. அதே பகுதியில் பிரசாதங்களான பஞ்சாமிர்தம், திருநீறு தயாரிக்கும் மையங்கள் புதிதாக கட்டப்பட உள்ளன.
புதிய அலுவலகம்: திருச்செந்தூர் கோயில் ஹிந்து அறநிலையத்துறை செயல் அலுவலர் அலுவலகம், வரவேற்பு அலுவலகம் என புதிய அலுவலக கட்டட வளாகமும் அமைகிறது. புதிய சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டங்கள், கோயில் யானைக்கு தங்கும் வளாகம் போன்ற புதிய திட்டங்களும் உள்ளன.
கும்பாபிஷேகம்: திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேகம் நடந்து 12 ஆண்டுகள் ஆகிவிட்டன. எனவே ரூ 20 கோடி மதிப்பில் கோயில் கோபுரம், சிதிலமடைந்த சுதை சிற்பங்கள் சீரமைப்பு, கடற்கரை முகப்பு, கோயில் உள் குளிர்சாதன வசதி உட்பட புரைமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு 2 ஆண்டுகளில் கும்பாபிஷேகமும் நடக்க உள்ளது.
கோயிலுக்குள் விரதம் இனி அமைதியில்லை: ஆண்டுதோறும் கந்த சஷ்டி விழாவின்போது கோயில் உள்பிரகாரத்தில் சுமார் 400 பேர் விரதம் இருக்க அனுமதிக்கப்பட்டனர். இந்த ஆண்டு புதிய பணிகள் நடப்பதால் அங்கு விரதம் இருக்க அனுமதிக்கப்படவில்லை. இனி வரும் ஆண்டுகளிலும் கோயில் பிரகாரத்தினுள் விரதம் இருக்க அனுமதிக்க கூடாது என பக்தர்கள் விரும்புகின்றனர். குறிப்பாக 400 பேர் விரதம் இருப்பதாக கூறினாலும் அங்கு 800க்கும் மேற்பட்டோர் தங்குகின்றனர். அவர்கள் இரவு நேரத்தில் வெளியே வந்து செல்வதும் இயற்கை உபாதை, நீராடியபிறகு ஈரத்துணிகளை, உள்ளாடைகளை கோயிலுக்கு உள்ளாகவே காயப்போடுதல் என கோயில் வளாகம் பாழ்படுகிறது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கோயில் வளாகத்தில் வெளியே விரதம் இருக்கும் ஆயிரக்கணக்கான பக்தர்களைப் போலவே அந்த 400 பேரும் கோயிலுக்கு வெளியே விரதம் இருக்கலாமே என்கின்றனர் முருக பக்தர்கள்.
உண்டியல் வசூல் அதிகரிப்பு : திருச்செந்தூர் கோயிலில் மாதம் தோறும் இரண்டு முறை உண்டியல்கள் எண்ணப்படுகின்றன. மாதம்தோறும் சுமார் ரூ 4 கோடி உண்டியல் வருமானம் வருகிறது. விழா நாட்களில் வருமானம் இன்னமும் அதிகரிக்கிறது. திருச்செந்தூர் கோயிலில் புதிய கட்டுமான பணிகளால் கோயில் வளாகம் இன்னும் அழகுறவும் பக்தர்களுக்கு பயனுள்ளதாகவும் மாறப்போகிறது.