பதிவு செய்த நாள்
04
நவ
2022
01:11
அவிநாசி: அவிநாசி அடுத்த நம்பியம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட பனப்பாளையம் பகுதியில் எழுந்தருளியுள்ள சித்தி விநாயகர், மாரியம்மன் கோவில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு 500ம் மேற்பட்ட பெண்கள் தீர்த்த குடம் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்றனர்.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இன்று காலை 500ம் மேற்பட்ட பெண்கள் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து தீர்த்தகுடம் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்றனர். அதனையடுத்து இன்று கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், வாஸ்து சாந்தி உள்ளிட்டவைகளுடன் முதல் கால யாக பூஜைகள் தொடங்குகின்றது. நாளை இரண்டாம் கால யாக பூஜையில் பூத சுத்தி வழிபாடு, திரவ்யயாகம், வேதிகார்ச்சனை நடைபெற்று கோபுர கலசங்கள் வைத்தல், மாலையில் லலிதா சகஸ்ரநாமம், திரவ்யாகுதி, தீபாரதனை உள்ளிட்டவைகள் நடைபெற்று அஷ்டபந்தன மருந்து சாற்றி சுவாமி சிலை பிரதிஷ்டி செய்தல் நடைபெறுகின்றது. அதன் பின்னர் திங்கள் காலை நான்காம் காலை யாக பூஜையில் மகாபூர்ணகுதி, தீபாரதனை, யாத்ரா தானத்துடன் சித்தி விநாயகர் மாரியம்மன் விமானத்துக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெறுகின்றது. அதனைத் தொடர்ந்து தசதரிசனம், மஹா அபிஷேகம், அலங்கார தீபாரதனை, பிரசாதம் வழங்குதல் உள்ளிட்டவைகள் நடைபெறும். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நாளை இரவு 8 மணிக்கு கிராமிய கலையான சிங்கை வள்ளி கும்மி நிகழ்ச்சி நடைபெறுகின்றது.மகா கும்பாபிஷேக விழாவினையடுத்து பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்படுகிறது.