மிளகனூரில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய விநாயகர் சிலை கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04நவ 2022 04:11
மானாமதுரை: மானாமதுரை அருகே உள்ள மிளகனுர் கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய விநாயகர் சிற்பத்தை வரலாற்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
மானாமதுரை அருகே உள்ள மிளகனூரில் வரசித்தி விநாயகர் கோவிலில் ஒரு பழமையான சிற்பம் இருப்பதாக அவ்வூரைச் சேர்ந்த கோவிந்தன் என்பவர் கொடுத்த தகவலின்படி பாண்டியநாடு பண்பாட்டு மையத்தைச் சேர்ந்த மீனாட்சி சுந்தரம், தாமரைக்கண்ணன் மற்றும் க.புதுக்குளத்தைச் சேர்ந்த சிவக்குமார் அங்கு சென்று கள ஆய்வு செய்த போது அந்த சிற்பம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய முற்கால பாண்டியர் காலத்தைச் சேர்ந்த விநாயகர் சிற்பம் என்று தெரியவந்தது.இந்த சிற்பம் குறித்து அவர்கள் கூறுகையில்,
இந்த சிற்பம் இரண்டரை அடி உயரமும் 2 அடி அகலமும் கொண்ட ஒரு பலகைக்கல்லில் புடைப்புச் சிற்பமாக விநாயகர் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது, சிற்பமானது 4 கரங்களுடனும் அதில் வலது பின் கரத்தில் மழுவும்,இடது பின் கரத்தில் பாசம் என்ற ஆயுதத்தையும், (பாசம் என்கிற ஆயுதம் விநாயகரின் தாய் பார்வதி தேவியின் ஆயுதமாகும் இந்த ஆயுதத்தை தன் மகன் விநாயகருக்கு தந்தருளியதாக ஐதீகம்) வலது முன் கரத்தில் அபய முத்திரையுடனும், இடது முன்கரத்தில் மோதகத்தை பிடித்த படியும் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. தலையில் கிரீடம் தரித்தும் அகன்ற இரண்டு காதுகளுடன் அழகாக சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது.வயிற்றுப் பகுதி வரை நீண்ட துதிக்கையும் இரண்டு கொம்புகளுடனும் சிற்பம் நேர்த்தியாக வடிக்கப்பட்டுள்ளது. மேலும் 4 கரங்களிலும் ஆபரண அணிகலன்கள் அணிந்தபடியும் 2 கால்களிலும் வீரக்கழலை அணிந்தபடியும் அமர்ந்த கோலத்தில் முற்கால பாண்டியருக்கே உரித்தான கைவண்ணத்தில் இந்த சிற்பம் சிறப்பாக வடிக்கப்பட்டுள்ளது.இந்த சிற்பத்தினை பார்க்கும் போது மிளகனூரில் முற்கால பாண்டியரின் சிவன் கோவில் இங்கு இருந்திருக்க வேண்டும் என்றும் கால ஓட்டத்தில் கோவில் அழிந்திருக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறினர்.