பதிவு செய்த நாள்
05
நவ
2022
08:11
பெரம்பலுார், கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் 2,625 கிலோ அரிசியில் சாதம் சமைத்து நவ., 7ம் தேதி அன்னாபிஷேகம் வெகு விமர்சையாக நடக்கிறது.
அரியலுார் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் கிராமத்தில் உள்ள பிரகதீஸ்வரர் கோவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ராஜராஜ சோழன் மகன் ராஜேந்திர சோழனால் கங்கை நதி வரை போராடி வெற்றி பெற்ற சின்னமாக கட்டப்பட்டது. இக்கோவில் உலக பிரசித்தி பெற்றது. புராதான சின்னமாக யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்டது. கோவிலில் சிங்கமுக கிணறு ஒரே கல்லில் ஆன நவக்கிரகம் பிரசித்தி பெற்றது. கோவிலில் உலக அளவில் வியக்கக் கூடியதில் ஒன்றாக கோவிலில் உள்ள சிவலிங்கம் 60 அடி சுற்றளவும் பதிமூன்றரை அடி உயரமும் கொண்டதாகும். ஒவ்வொரு வருடமும் ஐப்பசி பௌர்ணமி தினத்தன்று சாதம் சமைத்து கோவிலில் உள்ள பிரகதீஸ்வரர் லிங்கத்திற்கு அபிஷேகம் நடப்பது வழக்கம். லிங்கத்தின் மேல் சாத்தப்படும் ஒவ்வொரு சாதமும் லிங்கத்தின் தன்மையை பெறுகிறது. இதனால், ஒரே நேரத்தில் கோடிக்கணக்கான லிங்கத்தை தரிசிக்கும் புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். இந்த ஆண்டு நவ.,7ம் தேதி அன்று அன்னாபிஷேகம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு 5ம் தேதி கணக்க விநாயகருக்கு மகாபிஷேகமும், நாளை 6ம் தேதி திருவிளக்கு பூஜை, பிரகதீஸ்வரர் அம்பாள், மகிஷாசுர மர்த்தினி, சுப்பிரமணியர் மற்றும் நவகிரகங்கள் ஆகியவற்றுக்கு மகா அபிஷேகம், தீபாராதனையும் நடக்கிறது.
நவ., 7ம் தேதி 75 கிலோ எடையுள்ள 35 மூட்டை என 2,625 கிலோ அரிசியால் சாதம் சமைத்து அன்று காலை 10 மணிக்கு மேல் அன்னம் சார்ந்த துவங்கி, அன்னாபிஷேகம் நடைபெற்று, மாலை 6 மணியளவில் மகாதீபாராதனை நடைபெறும். அன்னாபிஷேகத்திற்கு பின் தீபாராதனை முடிந்து பக்தர்களுக்கு லிங்கத்தின் மேல் சாத்தப்பட்ட அன்னம் இரவு 9 மணியளவில் பிரசாதமாக வழங்கப்படும். மீதமுள்ள சாதத்தினை ஏரி, குளங்களில் மீன்களுக்கு உணவாக அளிக்கப்படும். 8ம் தேதி மூலவருக்கு ருத்ரா அபிஷேகமும் நடைபெற உள்ளது. விழாவிற்கு அன்னாபிஷேக கமிட்டி ஒருங்கிணைப்பாளர் கோமகன், இந்து சமய அறநிலைத்துறை மற்றும் காஞ்சி சங்கரமட அன்னாபிஷேக விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர். இவ்விழாவை முன்னிட்டு 7ம் தேதி மூன்று வேளையும் அன்னதானம் நடைபெறுகிறது.