மருத்துவக்குடி காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேக பணி: திருவாடுதுறை ஆதினம் ஆய்வு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14நவ 2022 05:11
தஞ்சாவூர்,- தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை மருத்துவக்குடி விசாலாட்சி அம்பாள் சமேத காசி விஸ்வநாதர் கோவிலில் 84 ஆண்டுகளுக்குப் பிறகு தற்பொழுது பழமையான முறையில் சுண்ணாம்பு பூச்சு கொண்டு திருப்பணி நடக்கிறது.
இக்கோவில் வரும் 20ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. இக்கோவில் திருப்பணிகளை திருவாவடுதுறை ஆதீனம் 24வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் பார்வையிட்டார். தொடர்ந்து 45 நதிகளின் புனித தீர்த்தங்களுக்கு வழிபாடு செய்து யாகசாலை மண்டபம் மற்றும் புனித நீர் ஊர்வலத்திற்கான பக்தர்களுக்கான 500 குடங்கள், புடவைகள் மற்றும் கோவில் விமானத்தில் வைக்கப்படும் கலசங்களையும் பார்வையிட்டு கும்பாபிஷேக ஏற்பாடுகளையும் கேட்டறிந்தார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில், பழமையான கோவில்களை புராதானத்தை பாதுகாக்கும் வகையில் திருப்பணி செய்வது அவசியம். மருத்துவக் குடியில் 84 ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடைபெறாமல் சிதலமடைந்து காணப்பட்ட காசி விஸ்வநாதர் கோவிலை மிகவும் சிறப்பாக திருப்பணி செய்திருப்பது பாராட்டுக்குரியது. கோவில்களில் இறைவழிபாட்டிற்கு இடையூறு தரக்கூடிய எந்த ஒரு செயலும் அனுமதிக்க கூடாது. அத்தகைய வகையில் கோவில்களில் சிவாச்சாரியார்கள், பணியாளர்கள், பக்தர்கள் செல்போன் பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டும் என்ற உயர்நீதிமன்ற நீதிபதிகளின் யோசனை வரவேற்கத்தக்கது. அதனை அரசு முழுமையாக செயல்படுத்த முன்வர வேண்டும். மேலும் கூட்டம் அதிகமாக உள்ளதால் சிறப்பு தரிசனம் என்ற பெயரில் கோவில்களில் கட்டண தரிசனம் இருப்பது தடுக்கப்பட வேண்டும்.
அதேபோல் நமது பண்பாடு, கலாச்சார உடை அணிந்து கோவில்களில் வழிபாடு செய்வது மிக அவசியமானது. திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான திருநெல்வேலி குறுக்குத்துறை முருகன் கோவில் திருப்பணி நடக்கிறது. சூரியனார் கோவிலில் நவக்கிரக நாயகர்களுக்கு கருங்கல் தளம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. திருப்பணிகள் விரைந்து மேற்கொண்டு கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்றார். திருப்பணி கமிட்டி பொறுப்பாளர் ஆடுதுறை பேரூராட்சி தலைவர் ஸ்டாலின், கோயில் செயல் அலுவலர் கிருஷ்ணகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.