கோயில் நிலத்தை மீட்க அதிகாரிகள் ஒத்துழைக்காவிடில் சிறை தான்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16நவ 2022 10:11
மதுரை : கோயில்களுக்கு சொந்தமான நிலத்தை மீட்கும் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஒத்துழைப்பு அளிக்க மறுத்தால் சிறை செல்ல நேரிடும், என, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை எச்சரித்தது.
திருச்சி சாவித்ரி துரைசாமி தாக்கல் செய்த பொதுநல மனு: மயிலாடுதுறை மாவட்டம் தர்மபுரம் ஆதினத்திற்கு சொந்தமாக பல்வேறு பகுதிகளில் சொத்துக்கள் உள்ளன. திருச்சி மற்றும் திருக்கற்குடியில் ஆதினத்திற்கு சொந்தமான நிலத்தை சில மூன்றாம் நபர்கள் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் ஆதினத்திற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அறநிலையத்துறைக்கு புகார் அனுப்பினோம். நிலத்தை மீட்டு ஆதினத்திடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்தியநாராயணபிரசாத் அமர்வு விசாரித்தது.
மனுதாரர் தரப்பு: ஆதினம் மடத்திற்கு சொந்தமான நிலத்தை அளவீடு செய்வதில் அரசுத் தரப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்தது.
நீதிபதிகள்: கோயில்களுக்கு சொந்தமான நிலத்தை மீட்கும் விவகாரத்தில் மெத்தனமாக செயல்படக் கூடாது. மீட்பு பணியில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஒத்துழைப்பு அளிக்க மறுத்தால் சிறை செல்ல நேரிடும். இவ்வழக்கில் மேற்கொண்ட நடவடிக்கை குறித்து அறநிலையத்துறை தரப்பில் நவ.,23 ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு தெரிவித்தனர்.