கிடப்பில் போடப்பட்ட ராமர் கோயில் பணி : நிதி ஒதுக்கப்படுமா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16நவ 2022 10:11
திருவாடானை: ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே ராமர் கோயில் கட்டப்படும் என சுற்றுலாத்துறை அறிவித்து பல ஆண்டுகளாகியும் நிதி ஒதுக்கீடு இன்றி பணிகள் கிடப்பில் போடப்பட்டதால் பக்தர்கள் கவலையடைந்துள்ளனர். வரும் பட்ஜெட்டிலாவது நிதி ஒதுக்கப்படுமா என எதிர்பார்க்கின்றனர்.
தொண்டி அருகே புல்லக்கடம்பன் ஊராட்சி இடையான்வயலில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய ராமர் கோயில் உள்ளது. ராமபிரான் சீதையை தேடி இந்த வழியாக சென்ற போது இங்கு குடில்கள் அமைத்து இளைப்பாறினார். அதன் நினைவாக அப்போது ஆண்ட மன்னர்கள் ராமர் பாதம் அமைத்து கோயில் கட்டியுள்ளனர். இது குறித்து தீர்த்தாண்டதானம் சகலதீர்த்தமுடையவர் கோயில் சிவாச்சாரியார் அருண் கூறியதாவது: இலங்கைக்கு செல்லும் முன் தீர்த்தாண்டதானத்தில் சுயம்பு மூர்த்தியாக இருக்கும் சகல தீர்த்த முடையவரை வணங்கி செல்ல அகத்தியர், ராமபிரானிடம் கூறினார். அப்போது இந்த வழியாக ராமபிரான் சென்ற போது தாகம் எடுக்கவே அங்கு தங்கினார். இதற்கு ஆதாரமாக தீர்த்தாண்டதானம் கோயில் முன்பு ஊருணிக்கரையில் அகத்தியர் சிலை உள்ளது, என்றார். பழமை வாய்ந்த இக்கோயில் சிதிலமடைந்துள்ளது. அப்பகுதியினர் ராமர் பாதத்திற்கு மாலை அணிவித்து, பூஜை செய்து வணங்கி வருகின்றனர். ராமபிரான் பாதம் இருப்பதாலும், வரலாற்று சிறப்பு இருப்பதாலும் சுற்றுலாத்தலமாக அறிவிக்கப்பட்டது. அதனையடுத்து சுற்றுலாத்துறை சார்பில் ரூ.2 கோடியே 99 லட்சம் நிதியில் கோயில் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து 16 ஏக்கரிலுள்ள இக்கோயிலை சுற்றிலும் அடர்ந்திருந்த சீமை கருவேல மரங்கள் மற்றும் புதர்கள் புல்லக்கடம்பன் ஊராட்சி சார்பில் அகற்றப்பட்டது. ராமர் கோயில் அமைய இருந்ததால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்தனர். கொரோனா பரவல், சட்டசபை தேர்தல் என பல்வேறு காரணங்களால் பணிகள் துவங்கவில்லை. சுற்றுலாத்துறை அலுவலர்கள் கூறுகையில், கோயில் கட்ட திட்ட மதிப்பீடு செய்து அரசுக்கு அனுப்பப்பட்டது. வரும் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படலாம். அதன் பின் பணிகள் துவங்கும், என்றனர்.