மதுரை : மேலூர் வட்டம், தும்பைப்பட்டி சிவாலயபுரத்தில் எழுந்தருளி, அருள்பாலித்து வரும் கோமதி அம்பிகை சமேத, சங்கர லிங்கம் சுவாமி, சங்கர நாராயணர் சுவாமி கோயிலில் அருள்மிகு கால பைரவர் சுவாமிக்கு, ஐப்பசி மாத தேய்பிறை ஜென்ம அஷ்டமியை முன்னிட்டு, அபிஷேகம், அர்ச்சனை அலங்கார வழிபாடு நடைபெற்றது.
நாட்டில் மக்கள் நோயற்ற வாழ்விற்கும், அமைதி தழைத்தோங்கவும், விவசாயம் செழித்தோங்கவும், மழை பெய்ய வேண்டியும், கொரோனா தொற்று நோயிலிருந்து மக்கள் விடுபடவும், சிறப்பு வழிபாடு நடைபெற்றது. காலை 11.30 மணிக்கு அருள்மிகு கால பைரவர் சுவாமிக்கு, எண்ணெய் காப்பு சாற்றி, திரவியம், மஞ்சள், பஞ்சகவ்யம், பச்சரிசி மாவு, திருமஞ்சனம், பால், தயிர், இளநீர், கரும்பு சாறு, பழச்சாரு, பஞ்சாமிர்தம், தேன், ஸ்வர்ணம், சந்தனம், பன்னீர், திருநீர் போன்ற பதினாறு வகையான அபிக்ஷேகங்கள் நடைபெற்றது. இன்றைய இறைப் பணியில் கோட்டப்பட்டியைச் சேர்ந்த திரு.சிவ.ராஜா சிவராமன் - சிவ.S. திவ்யா, குடும்பத்தினர், செய்திருந்தனர். பக்தர்கள் பைரவர் பதிகம், சிவபுராணம், தேவாரம், திருவாசகம் பாராயணம் செய்தனர். கால பைரவர் சுவாமிகள் சர்வ அலங்காரத்தில் காட்சி அளித்தார். பக்தர்களுக்கு தயிர் சாதம், உளுந்த வடை, அவல் பாயசம், அபிஷேக பால், பஞ்சாமிர்தம் பிரசாதம் வழங்கப்பட்டது. திருக்கோயில் அர்ச்சகர் ராஜேஷ் , சங்கர நாராயணர் கல்வி அன்னதான அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.