பதிவு செய்த நாள்
23
நவ
2022
04:11
உ.பி., மாநிலம், காசியில் நடந்து வரும், காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியின் துவக்க விழாவில், சிறப்பு அழைப்பாளராக, இசையமைப்பாளர் இளையராஜா பங்கேற்றார். பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில், இளையராஜா, தமிழகத்துக்கும், காசிக்கும் உள்ள தொடர்பு குறித்து பேசினார்.
அப்போது, கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவர், முத்துசாமி தீட்சிதர். காசியில், கங்கை நதியில் அவர் மூழ்கி எழுந்தபோது, சரஸ்வதி தேவி, அவர் கையில் வீணை ஒன்றை பரிசளித்துள்ளார். அந்த வீணை இன்னமும் இருக்கிறது. இங்கிருக்கும் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டு உள்ளது. இப்படி, இசையாலும் தமிழகமும், காசியும் பிணைக்கப்பட்டு இருக்கின்றன என்றார். அதைத் தொடர்ந்து, காசி அருங்காட்சியகத்தில் தேடியபோது, முத்துசாமி தீட்சிதர் வீணை இல்லை என்ற தகவல் கிடைத்தது. இதையடுத்து, இளையராஜா குறிப்பிட்ட முத்துசாமி தீட்சிதரின் வீணை எங்கு உள்ளது என்ற தேடுதல் துவங்கியது.
உறுதியான தகவல்: திருநெல்வேலி மாவட்டம், எட்டையபுரத்தில் உள்ள முத்துசாமி தீட்சிதர் நினைவிடத்தில், அந்த வீணை பாதுகாக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டது. விசாரித்தபோது, அங்கும் இல்லை என்றே பதில் கிடைத்தது. நீண்ட தேடலுக்குப் பின், கோவையில் வசிக்கும் முத்துசாமி தீட்சிதரின் சகோதரர் வழி வந்த ஏழாம் தலைமுறை வாரிசான ஆடிட்டர் முத்துசாமியிடம், குறிப்பிட்ட அந்த வீணை இருக்கும் உறுதியான தகவல் கிடைத்தது. கோவையில் ஆண்டு தோறும், சத்காரியா அறக்கட்டளை சார்பில், முத்துசாமி தீட்சிதர் ஜெயந்தி கீர்த்தனாஞ்சலி இசை விழா நடந்து வருகிறது. அந்த இசை விழாவுக்கு, அந்த வீணை எடுத்து வரப்பட்டு ஆராதிக்கப்படுகிறது. கோவை சத்காரியா அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் பி.ராமநாராயணன் கூறியதாவது: முத்துசாமி தீட்சிதர், 300 ஆண்டுகளுக்கு முன், காசியில் உள்ள கங்கையில் மூழ்கி எழுந்தபோது, சரஸ்வதி தேவியால் அருளி அளிக்கப்பட்ட பழைமையான வீணை, இன்றும் போற்றி பாதுகாக்கப்படுகிறது.
தினமும் பூஜை: பழமையான அந்த வீணையை தன் வீட்டில் வைத்து, அவரது சகோதரர் வழி வந்த ஏழாம் தலைமுறை வாரிசான ஆடிட்டர் முத்துசாமி பாதுகாத்து வருகிறார். அவர் வீட்டின் பூஜை அறையில் வீணை வைக்கப்பட்டுள்ளது. தினமும் அதற்கு பூஜை செய்யப்படுகிறது. கோவையில் ஆண்டு தோறும் முத்துசாமி தீட்சிதர் ஜெயந்தி கீர்த்தனாஞ்சலி எனப்படும் மூன்று நாள் இசை விழா நடத்தப்படுகிறது. அதற்கு, முத்துசாமி தீட்சிதரின் வழித் தோன்றலான, ஆடிட்டர் முத்துசாமியும் அழைக்கப்படுவார். இசை விழாவுக்கு தினமும் முத்துசாமி, அந்த வீணையுடன் வந்து விடுவார். வீணைக்கு, பூர்ண கும்ப மரியாதை அளிக்கப்படும். இசை நிகழ்ச்சி நடத்தப்படும் இடத்தில், சங்கீத மும்மூர்த்திகள் படங்களோடு, வீணையும் வைக்கப்படும்; பூஜை செய்யப்படும். இந்த இசை நிகழ்ச்சி, 10 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன், வீணை சிறு அளவில் பழுது பார்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. மற்றபடி, 300 ஆண்டுகளை கடந்த பிறகும், வீணை அதே நிலையில் உள்ளது. முத்துசாமி, தன் ஆடிட்டர் பணிக்காகவும், பிள்ளைகளை பார்க்கவும் வெளிநாட்டுக்கு செல்வார். அப்போதும், வீணையை தன்னுடன் எடுத்து செல்வார். வீணையை ஒரு பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறார். தற்போது, வயது முதிர்வால் முத்துசாமி வெளியில் வருவதில்லை. இருந்தாலும், வீணையை பாதுகாப்பதில் அவரது முனைப்பு சிறிதும் குறையவில்லை. இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -