திருப்புத்தூர்: திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயில் யோக பைரவருக்கு சம்பக சஷ்டி விழா நேற்று அஷ்ட பைரவர் யாகத்துடன் துவங்கியது.
குன்றக்குடி ஐந்து கோயில் தேவஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் பைரவருக்கு சம்பக சஷ்டி விழா ஆறு நாட்கள் நடைபெறும். நேற்று காலை 10:00 மணிக்கு யோக பைரவர் சன்னதி முன்பாக யாகசாலையில் பூர்வாங்க பூஜைகள் துவங்கின. தொடர்ந்து காலை 11:00 மணிக்கு பாஸ்கர் குருக்கள் தலைமையிலான சிவாச்சார்யர்கள் அஷ்ட பைரவர் யாகம் துவங்கினர். யாகம் நிறைவுக்குப் பின் பூர்ணாகுதி தீபாராதனை நடந்தது. யாகக் கலசங்கள் மூலவர் சன்னதிக்கு புறப்பாடாகியது. தொடர்ந்து மூலவருக்கு அபிஷேகங்கள் நடந்தன. பின்னர் மஞ்சள் காப்பு, மஞ்சள் வஸ்திரம் அணிந்து சுவாமி அருள்பாலித்தார். சிறப்பு தீபாராதனையை பக்தர்கள் திரளாக தரிசித்தனர். இதே போன்று மாலையிலும் அஷ்ட பைரவர் யாகம் நடந்தது. தொடர்ந்து 6 நாட்களிலும் தினசரி காலை,மாலை நேரங்களில் யாகம் நடைபெறும். ஏற்பாட்டினை சம்பக சஷ்டி விழா குழுவினர் செய்தனர்.