பதிவு செய்த நாள்
27
நவ
2022
06:11
பழநி,: பழநி மலைக்கோயிலில் காப்பு கட்டுதலுடன் திருக்கார்த்திகை விழா நவ.30ல் துவங்க உள்ளது.
பழநி மலைக்கோயிலில் திருக்கார்த்திகை விழா (நவ.30) முதல் டிச.,6 வரை நடைபெற உள்ளது. நவ.30ல் மலைக்கோயிலில் சாயரட்சை பூஜையில் காப்பு கட்டுதல் நடைபெறும். நவ.30., முதல் டிச.5.வரை சாயரட்சை பூஜைக்கு பின் சண்முகருக்கு அர்ச்சனை, தங்க சப்பரத்தில் சின்னகுமார சுவாமி புறப்பாடு, தங்கரத புறப்பாடு நடைபெறும்.
திருக்கார்த்திகை தீபம்: டிச.5., அன்று சாயரட்சை பூஜையில் சன்னதியில் பரணி தீபம் ஏற்றுதலும். திருக்கார்த்திகை தினமான டிச.,6., அன்று மாலை 4:00 மணிக்கு சாயரட்சை பூஜையும், மாலை 4:45 மணிக்கு சின்ன குமாரசுவாமி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி யாகசாலை, பிரகாரம் வலம் வருவார். அதன்பின் தீபமேற்றும் மண்டபத்திற்கு எழுந்தருள்வார். பிரகாரங்களில் தீபம் வைத்தல் நடைபெறும். மாலை 6:00 மணிக்கு தீப ஸ்தம்பத்தில் மகாதீபம் ஏற்றும் நிகழ்வும், சொக்கப்பனையும் ஏற்றுதலும் நடைபெறும். மலைக்கோயிலை தொடர்ந்து திருஆவினன்குடி கோயில், பெரியநாயகியம்மன் மகா தீபம் சொக்கப்பனை ஏற்றும் நிகழ்வுகள் நடைபெறும். விழா நாட்களில் மலைக்கோயில் தெற்கு வெளி பிரகார திருமண மண்டபத்தில் சமய சொற்பொழிவு மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். நிகழ்ச்சிகளில் அறங்காவலர் குழு தலைவர் சந்திரமோகன், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் இணைஆணையர் நடராஜன் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.