நான்கு ஆண்டுக்கு பின் பக்தர்களுக்கு அனுமதி; புல்மேடு பாதையில் அதிகாரிகள் ஆய்வு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28நவ 2022 10:11
சபரிமலை : கேரளாவில் 2018 ல் ஏற்பட்ட பெருமழை சேதத்துக்கு பின் இந்தாண்டு முதல் புல்மேடு பாதையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று அதிகாரிகள் அப்பாதையில் நடந்து சென்று ஆய்வு நடத்தினர்.
இடுக்கி சப் கலெக்டர் அருண் எஸ். நாயர் தலைமையில் வருவாய், வனம் மற்றும் போலீஸ் அதிகாரிகள் வண்டிபெரியாறில் இருந்து சத்திரம், உப்புதரை புல்மேடு வழியாக 16 கி.மீ., துாரம் நடந்து சன்னிதானம் வந்தனர். வழிகளில் பக்தர்களுக்காக செய்யப்பட்டுள்ள வசதிகள், இனி என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஆய்வுகள் மேற்கொண்டனர். இப்பாதையில் உள்ள இயற்கை அருவியான உரக்குழி தீர்த்தத்தையும் அவர்கள் பார்வையிட்டனர். 2018- ல் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, அதையடுத்து பெண்கள் சபரிமலை வரும் பிரச்னை, கொரோனா பரவல் காரணங்களால் நான்கு ஆண்டுகளாக இப்பாதையில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்த பாதையில் வரும் பக்தர்கள் காலை 7:00 முதல் மதியம் 2:30 மணி வரை சத்திரம் செக்போஸ்ட் தாண்டி செல்ல அனுமதிக்கப்படுவர். அதன் பின் வரும் பக்தர்கள் அடுத்த நாள் காலையில் செல்ல அனுமதிக்கப்படுவர். ஆறு இடங்களில் வனத்துறை ஊழியர்கள் மற்றும் சுற்றுச்சூழல் காவலர்கள் பணியில் அமர்த்தப்பட்டு பக்தர்களுக்கு உதவி செய்து வருகின்றனர். புல்மேடு மற்றும் உப்புத்தரையில் மெடிக்கல் மற்றும் சிறிய கடை திறக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் சத்திரம் வரை தங்கள் வாகனங்களில் வந்த பின் நடந்து செல்ல வேண்டும்.