பதிவு செய்த நாள்
28
நவ
2022
12:11
தென்தாமரைகுளம்: சாமிதோப்பு அய்யா வைகுண்ட சாமி தலைமைப்பதியில் நேற்று ஆயிரக்கணக்கான அய்யப்ப பக்தர்கள் திரண்டு அய்யாவை வணங்கி சென்றனர். சாமிதோப்பு அய்யா வைகுண்ட சாமி தலைமைப்பதியில் ஞாயிற்றுகிழமை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படுவது வழக்கம். கார்த்திகை மாதம் இரண்டாம் ஞாயிற்றுக் கிழமையான நேற்று பதியில் ஏராளமான அய்யப்ப பக்தர்கள்,அய்யா வழி பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. நேற்று அதிகாலை முதலே கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் மற்றும் ஆந்திரா, கர்நாடக, தெலுங்கானா ஆகிய மாநிலங்களை சேர்ந்த ஏராளமான அய்யப்ப பக்தர்களும் குவிந்தனர். அவர்கள் முத்திரிகிணற்றில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து பால், பழம், பன்னீர், தேங்காய் ,பூ ஆகியவற்றை சுருளாக வைத்து அய்யாவை வணங்கி சென்றனர். அன்னதர்மம் முன்னதாக அதிகாலை 4மணிக்கு நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து உகப்படிப்பு, வாகன பணிவிடை, நித்தப்பால் தர்மம், மதியம் உச்சிபடிப்பு பின்னர் அன்ன தர்மம் நடந்தது. பக்கர்களுக்கு இனிப்பு , சந்தனம் , வெற்றிலை , பாக்கு இனிமமாக வழங்கப்பட்டது. தொடர்ந்து சாமிதோப்பு தலைமை குரு பால ஜனாதிபதி, அய்யாவழி சமயம் மற்றும் அய்யா வைகுண்டசாமியின் அற்புதங்கள் குறித்து பக்தர்களிடையே ஆன்மிகசொற்பொழி வாற்றினார். மாலையில் அய்யாவுக்கு பணிவிடை நடந்தது. தொடர்ந்து பிச்சிப் பூவால் அலங்கரிக்கப்பட்ட சிறிய சப்பரவாகன பவனியும் அன்ன தர்மம் நடை பெற்றது.